திரையுலகில் தனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களை எப்போதுமே மறக்க இயலாது என்கிறார் 'அட்டக்கத்தி' தினேஷ். இன்று தமிழ்த் திரையுலகில் முன்னணி இடத்தைப் பிடிக்க ஓடிக் கொண்டிருக்கும் இளம் நடிகர்களில் முக்கியமானவர். "சினிமாவில் எனக்கு இரு அண்ணன்கள் கிடைத்திருக்கிறார்கள். மூத்த அண்ணன் வெற்றிமாறன். சின்ன அண்ணன் பா.ரஞ்சித். "என்னுடைய வாழ்க்கையில் நடக்கும் நல்லது, கெட்டது என அனைத்தையுமே இவர்களிடம் மறைக்காமல் பகிர்ந்துகொள்வேன். கடந்த 2002ல் சினிமா வாய்ப்புகள் தேடி நான் ஒவ்வொரு நிறுவனமாக ஏறி இறங்கியபோது ஒரு நாள் பாலு மகேந்திரா சார் அலுவலகம் போனேன். "அங்கே அவரைப் பார்க்க முடியவில்லை.
அவருடைய உதவியாளராக இருந்த வெற்றிமாறன் சாரிடம் வாய்ப்பு கேட்டேன். நடிப்புப் பயிற்சி பெற்ற பிறகு வந்து பாருங்க என்று சாதாரணமாகச் சொல்லி அனுப்பிவிட்டார். "ஆனால் அவர் சொன்னதற்காகவே 'கூத்துப்பட்டறை'யில் பல ஆண்டுகள் பயிற்சி பெற்றேன். வேலையும் பார்த்தேன். 'விசாரணை' பட வாய்ப்பு தானாகத் தேடி வந்த ஒன்று. அந்தப் படத்துக்கு மக்கள் இந்தளவு வரவேற்பு கொடுத்திருப்பதை நினைத்தால் உற்சாகமாக இருக்கிறது. பாலு மகேந்திராவிடம் பணியாற்றும் பாக்கியம் கிடைக்கவில்லை. இப்போது வெற்றிமாறன் அண்ணன் என்னை நம்பி வேலை கொடுப்பதை நினைக்கும்போது, நான் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவன் என்பது புரிகிறது. பாலு மகேந்திரா சாரிடமே வேலை பார்த்த மனநிறைவு கிடைக்கிறது." அண்மைய மகிழ்ச்சி? "ஒருநாள் 'கபாலி' படப்பிடிப்பில் இருந்தேன். அன்று ரஜினி சார் 'விசாரணை' படத்தைப் பார்க்கப் போகிறார் என்று தகவல் கிடைத்தது. மறுநாள் படப்பிடிப்பில் நான் நடித்துக்கொண்டிருந்தேன். "அப்போது ரஜினி சார் அங்கு வந்தார். நேராக என்னை நோக்கி வந்தவர், 'நேற்று உங்கள் படம் பார்த்தேன். பிரமாதம், அற்புதம்... என்ன ஒரு நடிப்பு... கலக்கிவிட்டீர்கள்' என்று என்னைக் கட்டிப் பிடித்து பாராட்டினார். பதிலுக்கு என்ன செய்வது, பேசுவது எனத் தெரியாமல், புரியாமல் தவித்துப் போனேன். இதைவிட மகிழ்ச்சியான தருணம் வேறென்ன இருக்க முடியும்?" எப்படி வந்திருக்கிறது 'ஒருநாள் கூத்து'?
"முதல் முறையாக இதில் தலை சீவி நடித்திருக்கிறேன். என்னை ஒரு அழகான பையனாக காட்டியிருக்கிறார் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன். வானொலியில் வேலை பார்த்த அனுபவத்தில் இப்படி ஒரு கதையை உருவாக்கியுள்ளார். அவருடைய நண்பரின் வாழ்க்கையில் நடந்த சம்பவமும் உள்ளது. இதில் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சார்ந்த இளைஞனாக என்னை ஸ்டைலாக மாற்றியுள்ளார்.