கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகளில் 2017ஆம் ஆண்டுக்கான மாணவர் பதிவு ஏப்ரல் மாதத்தில் இடம்பெறவுள்ளது. 2012 ஜனவரி 2ஆம் தேதி முதல் 2013 ஜனவரி முதல் தேதி வரையில் பிறந்த சிங்கப்பூர் குடியுரிமை அல்லது நிரந்தரவாசத் தகுதியுள்ள மாணவர்களுக்கான பதிவு இது. ஏப்ரல் 2 சனிக்கிழமை, ஏப்ரல் 4 திங்கட்கிழமை ஆகிய இரு நாட்களும் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரையில் எட்டு நிலையங்களில் பதிவு நடை பெறும் என்று கல்வி அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. நார்த்ஓக்ஸ், ரிவர்சைட், யீசூன், பொங்கோல் கிரீன், பொங்கோல் வியூ, ஃபேரர் பார்க், தெம்பனிஸ், டாச்சோங் ஆகியவை அந்த எட்டு நிலையங்களாகும்.
ஃபெர்ன்வேல் லிங், செங்காங் கிரீன், ஸ்பிரிங்டேல், பிளாங்கா ரைஸ், ஃப்ரண்டியர், வெஸ்ட் ஸ்பிரிங், வெஸ்ட்வுட் ஆகிய ஏனைய ஏழு நிலையங்களிலும் ஏப்ரல் 9 சனிக்கிழமை, ஏப்ரல் 11 திங்கட்கிழமை ஆகிய இரு நாட்களும் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரையில் பதிவு நடைபெறும். அனைத்து நிலையங்களும் பதிவு நடைபெறும் சனிக்கிழமைகளில் காலை 9 முதல் பகல் 2 மணி வரை பொதுமக்களுக்குத் திறந்து விடப்படும். ஆரம்பப் பருவத்திலேயே இரு மொழி ஆற்றலை வளர்ப்பதும் அர்த்தமுள்ள, ஈடுபடுத்தக் கூடிய கற்றல் அனுபவத்தின் மூலம் சிறார்களின் முழுமையான வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதும் இந்த பாலர் பள்ளிகளின் இலக்கு என கல்வி அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.