கோல்கத்தா: சொந்த மண்ணில் நடக்கும் டி20 உலகக் கிண்ணத்தை வெல்ல இந்திய அணிக்கே அதிக வாய்ப்பு என்று கூறப்பட்டு வரும் நிலையில் அவ்வணியின் செயல்பாடும் அதை மெய்ப்பிக்கும் வகையில் இருந்து வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் இரவு நடந்த டி20 உலகக் கிண்ண பயிற்சிப் போட்டியில் ரோகித் சர்மா (படம்) ஆட்டம் இழக்காமல் 98 ஓட்டங்களை விளாச, இந்திய அணி 45 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றியைச் சுவைத்தது. முதலில் பந்தடித்த இந்திய அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 185 ஓட்டங்களைக் குவித்தது. ரோகித்துக்கு அடுத்ததாக யுவராஜ் சிங் 31 ஓட்டங்களை எடுத்தார். இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 89 ஓட்டங்களைச் சேர்த்தனர்.
கடின இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கிறிஸ் கெய்ல் (18), ஜான்சன் சார்ல்ஸ் (20) ஆகியோர் அதிவேகத் தொடக்கம் தந்தனர். இருவரும் இணைந்து 3.3 ஓவரில் 36 ஓட்டங்களைச் சேர்த்தனர். ஆனாலும், இந்திய அணியின் இளம் நட்சத்திரம் ஜஸ்பிரீத் பும்ரா வீசிய பந்து ஸ்டம்ப்புகளைப் பதம் பார்க்க, கெய்ல் நடையைக் கட்டினார். அடுத்த ஓவரி லேயே சார்ல்ஸை வெளியேற்றினார் காயத்திலிருந்து மீண்டு திரும்பவும் இந்திய அணியில் இடம்பிடித்த முகம்மது ஷமி.