வில்சன் சைலஸ்
எழுதுதல், படித்தல் என கல்வித் திறனிலும் அறிவுத் திறனிலும் சிறந்து விளங்குகிறார் ஆறு வயது ரோகின் ஆனந்த் (படத்தில் குதிரையில் அமர்ந்திருப்பவர்). சாரதா பாலர் பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயின்று வரும் ரோகினின் திறமையை மெச்சாத ஆசிரியர்கள் கிடையாது. வகுப்பில் முதல் நிலை மாணவர்களில் ஒருவராகத் திகழும் ரோகின், பிறப்பு முதல் 'ஆர்த்ரோகிரைபோசிஸ்' எனும் மூட்டு மடக்க நோயால் பாதிக்கப்பட்டவர். நேராக அமர்வதில் சிரமத்தை எதிர்கொண்ட ரோகினுக்கு சித்ரா ரோஜர்ஸ் உயிருள்ள குதிரைகளைக் கொண்டு அளித்த பயிற்சிகள் உதவியாக இருந்தன.
ஓரிரு பயிற்சி வகுப்புகளுக்குப் பிறகு தமது மகனது நிலையில் முன்னேற்றத்தைக் கண்டதாக குறிப்பிட்டார் அவரது தாயார் திருமதி மகா, 34. "குதிரைகளைக் கொண்டு அளிக்கப்படும் பயிற்சிகள் என் மகனின் நிலையை மேம்படுத்தும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்," என்ற அவர், நான்கு வயதில் ரோகின் இந்த வகுப்பில் சேர்ந்ததாகச் சொன்னார்.
"சிங்கப்பூரில் இயங்கி வரும் 'Riding for the Disabled Association' (ஆர்டிஏ) எனும் மாற்றுத் திறனாளிகளுக்கான குதிரைப் பயிற்சிக் கழகம் ஏழு வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளை மட்டுமே ஏற்றுக் கொள்வதால் ரோஹினை அங்கே சேர்க்க முடிய வில்லை. சித்ராவின் வகுப்புகள்தான் கைகொடுத்தன," என்று கூறினார் திருமதி மகா. கைகளால் இயக்கப்படும் இயந்திரக் குதிரையை ரோகின் இன்னும் பயன்படுத்தவில்லை என்றும் சொன்ன அவர், எதிர்காலத்தில் அதற்கான வாய்ப்புகள் உண்டு என்றார். பயிற்சிகள் மூலம் ரோகினின் முதுகுத்தண்டுப் பிரச்சினை சீராகியுள்ளதாகக் கூறினார் திருமதி மகா.