குடியரசில் பதினொரு வயது மாணவர்கள் முதல் வயது வந்தோர் வரை, 'மைஸ்கில்ஸ்ஃபியூச்சர்' வலைத் தளத் தின்வழி இனி பலவித பயன்களைப் பெறமுடியும். துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்தினம் சென்ற வாரம், 'மைஸ்கில்ஃஸ்பியூச்சர்' வலைத்தளத்தையும் 'ஸ்கில்ஸ்ஃபியூச்சர்' ஆலோசனை வலைத்தளத்தையும் தொடங்கிவைத்தார். இவை இரண்டுமே மாணவர் களுக்கும் வயதுவந்தோருக்கும் பல வழிகளில் பயன் தரும் என்பது உறுதி.
தொடக்கப்பள்ளி ஐந்தாம் வகுப்பில் பயிலும் மாண வர்கள், இதன் வழி, தங்கள் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்குவார்கள். ஐந்தாம் வகுப்பில் பயிலும்போதுதான் அவர்கள், பின்னம், தசமபின்ன கணக்கு வகைகளைக் கற்றுக்கொள்ளத் தொடங்கு வார்கள். இனி அவர்கள், தங்கள் எதிர்கால வாழ்க்கைத் தொழில் பற்றியும் ஆழமாகச் சிந்திக்கத் தொடங்கலாம். இந்த ஏற்பாட்டின் காரணமாக, மாணவர்களும் வயதுவந்தோரும் திறன்கள் குறித்தும் பயிற்சிகள் பற்றியும் விரிவாகத் தெரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். வயதுவந்தோர் தங்களுக்கு உள்ள வேலை வாய்ப்புகள் பற்றித் தெரிந்துகொள்ள அந்த வலைத்தளம் உதவியாக இருக்கும். அவர்கள் தீவிரமாக தங்கள் திறன்களை பயிற்சிகள் மூலம் சீர்பட அமைத்துக் கொள்ளத் திட்டமிடவும் முடியும்.
தொடக்கப்பள்ளி மாணாக்கர்கள், துணைப் பிரதமர் தொடங்கிவைத்த வலைத்தளத்தின் மூலமாக விளை யாட்டுகள், அவர்கள் விரும்பும் தொழில்கள் முதலிய வற்றைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் வசதிகள் செய்யப் பட்டுள்ளன. வயதுவந்தோர், தங்களைத் தாங்களே மதிப்பீடு செய்துகொள்ளவும் தங்கள் வேலை தொடர் பான பயன்பாடுகளையும் வாழ்க்கைத்தொழில் ஆர்வங் களையும் தெரிந்துகொள்ளமுடியும்.
இந்த அளவுக்குப் பயன்தரும் அந்த வலைத்தளங் களின் விவகாரங்கள், கல்வி அமைச்சு, சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு, ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு ஆகியவை கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடுகளால் ஒவ்வொருவருக்கும் ஒரு தனிக்கணக்கு கொடுக்கப் படும். அதைப் பயன்படுத்துவோர் வாழ்நாள் முழுவதும் அதைப் பயன்படுத்திக்கொள்ளவும் முடியும். ஐந்தாம் வகுப்பு முதல் உள்ள மாணவர்களுக்கு அமைச்சு கணக்குகளை உருவாக்கிக்கொடுக்கும்.
வயதுவந்தோர், தங்கள் 'சிங்பாஸ்' கணக்கைப் பயன்படுத்தி, அரசாங்க அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு தேவையான விவரங்களைப் பெற்றுப் பயன் அடையலாம். கல்வி அமைச்சர் (உயர் கல்வி, திறன்கள்) திரு ஓங் யி காங், மூத்தவர்கள், தங்களுக்கு ஏற்ற பயிற்சிகள் பற்றியும் கிடைக்கக்கூடிய வேலைகள் பற்றியும் அந்த கணக்கின் மூலம் தெரிந்துகொள்ளலாம் என்று வலைப்பக்கங்களின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது கூறினார்.
இதற்கிடையே ஸ்கில்ஸ்ஃபியூச்சர் ஆலோசனைத் திட்டத்தின்கீழ், சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் இலவசமாகக் காட்டப்படவுள்ள 90 நிமிட சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்றுக்குச் செல்லலாம்.
அது ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ், ஆகிய மொழிகளில் சமூக மன்றங்களில் நடைபெறவுள்ளது. இதுவரை சுமார் ஆயிரம் பேர் அந்தச் சொற்பொழிவுக்குச் சென்று பயன் அடைந்துள்ளனர். இன்னும் எண்பதாயிரம் பேர் அடுத்த மூன்று ஆண்டுகளில் அந்த நிகழ்வுக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் கல்வி அமைச்சர் ஓங், சிங்கப்பூர் பயிற்சித் திட்டத்தில் பல முக்கியமான மாற்றங்கள் செய்யப்படும் என்று கூறியிருந்தார்.
வேலையில் இருக்கும் வயதுவந்தோர், தாங்கள் செல்லக்கூடிய பயிற்சி வகுப்புகள் பற்றியும் அவற்றுக்குக் கிடைக்கக் கூடிய நிதி உதவிகள் குறித்தும் கல்வி நிலையங்களுக்குள்ள முக்கிய பங்கு பற்றியும் அவர் தெரிவித்திருந்தார். முதுநிலைக் கல்விக்கான உதவித் தொகைகள் குறைக்கப்படுமா என்பது பற்றி அவர் ஏதும் கூறவில்லை. ஆயினும் கல்வி அமைச்சு, முழுமை யான நிதி உதவி தொடர்பான ஆய்வுகளை மதிப்பீடு செய்துகொண்டிருப்பதாக அவர் கூறினார். ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வலைத்தள வசதியை சிங்கப்பூரர் கள் திறம்பட பயன்படுத்திக்கொண்டு சிறுவயதில் இருந்தே பலவித பயன்களையும் அடையவேண்டும்.