ஒரு காலத்தில் ஆர்சனல், லிவர்பூல் ஆகிய முன்னணி இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுக்களின் நட்சத்திர ஆட்டக்காரர்களாகத் திகழ்ந்தவர்களின் திறமையை நேரில் கண்டுகளிக்க சிங்கப்பூர் காற்பந்து ரசிகர்களுக்கு அருமையான வாய்ப்பு. தேசிய விளையாட்டரங்கில் நாளை இரவு நடக்கவுள்ள 'பேட்டில் ஆஃப் த மாஸ்டர்ஸ்' போட்டிகளில் ஆர்சனல், லிவர்பூல் மாஸ்டர்ஸ் குழுக்களுடன் சிங்கப்பூர் மாஸ்டர்ஸ் குழுவும் களமிறங்குகிறது. ஃபாண்டி அகமது, அய்டி இஸ்கந்தர், அலெக்சாண்டர் டூரிச், மாலெக் அவாப், எஸ்.சுப்பிரமணி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் அதில் இடம்பெற்றுள்ளனர்.
லிவர்பூல் குழுவில் டேவிட் ஜேம்ஸ், எமில் ஹெஸ்கி, ஸ்டீவ் மெக்மனாமன், லூவிஸ் கார்சியா, ராபி ஃபௌலர் போன்ற முன்னாள் நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளனர். முன்னாள் ஆர்சனல் ஆட்டக்காரராரும் பிரெஞ்சு நாட்டவருமான ராபர்ட் பிரெஸ் முதன்முறையாக 'மாஸ்டர்ஸ்' போட்டிகளில் கலந்துகொள்ள சிங்கப்பூருக்கு வந்துள்ளார். அவருடன் நுவான்கோ கானு, மிக்கெல் சில்வெஸ்டர், கில்பர்ட்டோ சில்வா போன்றோரும் அக்குழு சார்பில் மீண்டும் களம்காணவுள்ளனர்.
பல ஆட்டங்களில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்துள்ளபோதும் தேசிய விளையாட்டரங்கில் விளையாடுவது 47 வயதான டூரிச்சுக்கு இதுவே முதல்முறை. ஆர்சனல் ரசிகரான அவருக்கு கானுவுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை நிறைவேறியது. "பிரிட்டனுக்கு நேரில் சென்று இபிஎல் போட்டிகளை நேரில் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. ஆயினும், நட்சத்திர ஆட்டக்காரர்கள் சிலருக்கு எதிராக ஆட வாய்ப்பு கிடைத்திருப்பதை எண்ணி உவகை கொள்கிறேன்," என்றார் டூரிச்.
'மாஸ்டர்ஸ்' போட்டிகளில் விளையாடுவதற்காக முதன்முறையாக சிங்கப்பூர் வந்துள்ள முன்னாள் ஆர்சனல் வீரர் பிரெஸ் (நடுவில்). உடன் நுவான்கோ கானு (வலது). படம்: மாஸ்டர்ஸ் ஃபுட்பால் ஏஷியா