விஜய் சேதுபதிக்கு அண்மைக்காலமாக அவருக்கு ஏற்ற கதைகளாக அமைந்து அவருக்கு வெற்றியைத் தேடித் தருகின்றன. 'நானும் ரௌடிதான்' படத்தை அடுத்து இவரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் 'காதலும் கடந்து போகும்'. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி 'சிரிப்பு ரௌடி'யாக வலம் வந்திருக்கிறார். 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'நானும் ரௌடிதான்' ஆகிய படங்களின் பாணியில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்திற்குப் படம் இவரு டைய நடிப்புத்திறன் அதிகரித்துக்கொண்டே போகிறது.
மலையாளத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற 'பிரேமம்' படம் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த மடோனா, இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியிருக்கிறார். கொஞ்சம் கூட மிகையில்லாத நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார். இந்தப் படம் வெளியான அன்றே இவரது இயற்கையான நடிப்பைப் பார்த்து தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் இவர் வீட்டை முற்றுகையிட ஆரம்பித்துவிட்டனர். 'சூது கவ்வும்' படத்தின் வெற்றிக்குப் பிறகு நலன் குமரசாமி இப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் 'மை டியர் டெஸ்பெரடோ' என்ற கொரிய படத்தின் அதிகாரபூர்வ மறுபதிப்பு. பெரிய அளவில் விஷயங்கள் இல்லாமல், எளிமையான கதை, திரைக்கதை அமைத்து வெற்றி கண்டிருக்கிறார்.
வசனங்கள் படத்திற்குப் பெரிய பலம். காட்சிகளை யதார்த்தமாகவும் இயல்பாகவும் எடுத்திருப்பது படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. விஜய் சேதுபதி கதாபாத்திரத்தை நன்றாகவே பயன்படுத்தியிருக் கிறார். சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. பின்னணி இசையும் படத்தின் கதைக்கேற்ப பயணிக்கிறது. குறிப்பாக 'ககக போத' பாடலும் அதனைப் படமாக்கிய விதமும் நடனமும் சிறப்பு. மொத்தத்தில் 'காதலும் கடந்து போகும்' வெற்றிநடை போடும்.