ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவின் மகளான கஹியாங் அயுவுக்கும் தொழில் அதிபர் பாபி நசுதினுக்கும் நேற்று கோலாகலமாக திருமணம் நடந்தது. ஜோக்கோ விடோடோ வின் சொந்த ஊரான மத்திய ஜாவாவில் உள்ள சோலோ நகரில் மகளின் திருமணம் நடந்தது. உறவினர்கள், நண்பர்கள் உட்பட 7,000க்கும் மேற்பட்ட விருந் தினர்கள், அமைச்சர்கள், அரசியல் வாதிகள், வர்த்தகர்கள் அந்த திருமண வைபவத்தில் கலந்துகொண்டனர். இந்தோனீ சியாவுக்கான சிங்கப்பூர் தூதர் அனில் குமார் நாயர் தன் மனைவியுடன் அந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இந்தோனீசிய முன்னாள் அதிபர்கள் மேகவதி சுகர்னோ புத்ரி, சுசிலோ பம்பாங் யுதயோனோ, காலஞ்சென்ற அதிபர் அப்துர் ரஹ்மான் வாஹித்தின் மனைவி, முன்னாள் இந்தோனீசியத் தலைமகள் சின்டா நூரியா ஆகியோரும் அந்த திருமண வைபவத்தில் கலந்துகொண்டனர். அதிபர் விடோடோவின் மகள் திருமணத்தை முன்னிட்டு சோலோ நகர மக்கள் பல நாட்களாகவே கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அவர்களின் திருமணத்தைக் கண்டு மகிழ நூற்றுக்கணக்கான மக்கள் திருமணம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் திரண் டிருந்தனர். திருமணத்திற்கு முன்னதாக வழக்கம்போல செவ்வாய்க்கிழமை இரவு மணப்பெண்ணின் ஊர்வலம் நடைபெற்றது. அத்தம்பதியர் முதன் முதலாக 2015ஆம் ஆண்டு மேற்குஜாவா வில் உள்ள பல்கலைக்கழகத்தில் சந்தித்ததாகவும் கடந்த ஓராண்டு காலமாக அவர்கள் பழகி வருவதாகவும் கூறப்பட்டது.
திருமணத்திற்கு முதல் நாள் இந்தோனீசியத் தலைமகள் இரியானா விடோடோ தன் மகளான மணப் பெண்ணுக்கு பாரம்பரிய வழக்கப்படி உணவு ஊட்டிவிடுகிறார். பக்கத்தில் அதிபர் விடோடோ. படம்: ஏஎஃப்பி