சோல்: வடகொரியவின் அணு ஆயுத பரிசோதனைக்கு அனைத்துலக நாடுகள், குறிப்பாக சீனா சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று தென்கொரிய அதிபர் பார்க் கியுன்- ஹை கோரிக்கை விடுத்துள்ளார். பல்லாயிரம் உயிர்களை ஒரே நேரத்தில் அழிக்கக்கூடிய ஆற்றல் கொண்ட ஹைட்ரஜன் குண்டை கடந்த 6 ஆம் தேதி வடகொரியா சோதனை செய்தது. அத்துடன் வடகொரியாவின் அணு ஆயுத பலத்தை மேலும் விரிவுப்படுத்துவோம் என வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் வடகொரியாவின் அந்த சோதனை தொடர்பாக, தென்கொரியத் தலைநகர் சோலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருவாட்டி பார்க், ' இணைய ஊடுருவல் உள்ளிட்ட அத்துமீறல்களில் வடகொரியா தொடர்ந்து ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. எனவே, வடகொரியவின் அணு ஆயுத பரிசோதனைக்கு தகுந்த முறையில் பதிலடி தரும் வகையில் ஐநா பாதுகாப்பு மன்றத்தின் நிரந்தர உறுப்பு நாடு என்ற முறையில் செயலாற்ற சீனா முன்வர வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.
வடகொரியாவின் அணு ஆயுத சோதனைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்நாட்டின் மீது கடுமையான பொருளியல் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு ஆதரவாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்ததைத் தொடர்ந்து திருவாட்டி பார்க்கின் அறிவிப்பு வெளிவந்துள்ளது.