மும்பை: மும்பையில் வீட்டுப்பாடம் எழுதாத இரண்டு மாணவர்களை நிர்வாணமாக்கி தண்டனை அளித்த இரண்டு ஆசிரியர்கள் மீது போலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக வகுப்பறைக்கு வெளியே இரண்டு மாணவர்கள் நிர்வாணமாக நிற்பது போன்ற காணொளி ஒன்று இணையத்தில் பரவியது. ஒரு சிறுவன் நிர்வாண நிலையிலும் மற்றொரு சிறுவன் சட்டை மட்டும் அணிந்த நிலையில் அரை நிர்வாணமாகவும் நின்று கொண்டிருப்பதை அந்தக் காணொளி காட்டியது.
அதோடு, இந்த மாணவர்கள் வெளியே நின்றுகொண்டிருக்கும்போது, மேலும் சில சிறுவர்கள் அறையின் உள்ளே செல்வது, பின்னர் வெளியே வருவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. அந்தக் காணொளிக்குச் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக தனியார் சமூக சேவை அமைப்பு ஒன்று போலிஸ் அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தது. இது பற்றி விசாரணை மேற்கொள்ளுமாறு மால்வாணி போலிசாருக்கு உத்தரவிடப் பட்டது. போலிசார் மேற்கொண்ட விசாரணையில், இந்த சம்பவம் மும்பை மலாடு மேற்கு மால்வாணி பகுதியில் இயங்கிவரும் தனியார் துணைப்பாடப் பயிற்சி மையத்தில் நிகழ்ந்தது தெரிய வந்தது. உடனடியாக, சம்பந்தப்பட்ட பயிற்சி வகுப்புக்குச் சென்ற போலிசார் அங்கு விசாரணை நடத்தினர். அதில், வீட்டுப் பாடத்தை எழுதாததால் இரண்டு சிறுவர்களையும் தண்டிக்கும் வகையில் ஆசிரியர்கள் கணேஷ் நாயர், சரோஜ் ஜெய்ஸ்வாஸ் ஆகியோர், அவர்களை வகுப்பின் வெளியே நிர்வாணமாக நிற்க வைத்தது உறுதியானது.
இதையடுத்து அந்த இரண்டு ஆசிரியர்கள் மீதும் போலிசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த சம்பவம் பற்றி பெற்றோர் அறிந்திருந்தும் புகார் ஏதும் செய்யாதது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் வெளியில் நிற்கும்போது அவ்வழியாகச் சென்ற ஒருவர் காணொளியை இணையத்தில் பதிவேற்றியதும் அறியப்பட்டது.
இணையத்தில் உலாவந்த காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்.