விஜயபுரா (கர்நாடகம்): வாஸ்து நிறுவனம் அளித்த அறிவுரையின்படி வீட்டில் மாற்றங்கள் செய்தபோதும் வாழ்க்கையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் வாஸ்து நிறுவனத்தின் மீது மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், விஜயபுரா நகரைச் சேர்ந்தவர் மகாதேவ் துதிஹால். சட்ட நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர், 2007ஆம் ஆண்டுமுதல் கடன்தொல்லையால் அவதியுற்று வந்தார். இந்நிலையில், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சரளா வாஸ்து' என்ற நிறுவனத்தின் விளம்பரத்தைக் கவனித்தார்.
"வாஸ்துபடி வீட்டை மாற்றம் செய்தால் கடன் தொல்லைகள் தீரும், மூன்று முதல் 8 மாதங்களில் மாற்றம் நிகழும்," என வாஸ்து நிறுவனம் அறுதியிட்டுக் கூறியது. மகாதேவும் ரூ. 4.5 லட்சத்தை கடனாகப் பெற்று தனது வீட்டை மாற்றி அமைத்தார். மாற்றம் வரும், ஏற்றம் வரும் என நினைத்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஓர் ஆண்டு நிறைவுற்ற நிலையில் வாழ்க்கையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதையடுத்து, மகாதேவ் 'சரளா வாஸ்து' நிறுவனத்தின் மீது மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்தார். நுகர்வோர் நீதிமன்றம், 'சரளா வாஸ்து' நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.