'இருமுகன்' படத்திற்குப் பிறகு விக்ரம் நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு 'கருடா' எனப் பெயர் வைத்திருக்கின்றனர். இப் படத்தை 'சமர்', 'நான் சிகப்பு மனிதன்' ஆகிய படங்களை இயக்கிய திரு இயக்குகிறார். விக்ரம் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கும் இப்படம் குறித்து இருவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மேலும், வில்லனாக மகேஷ் மஞ்சுரேக்கர் என்ற பாலிவுட் நடிகர் நடிக்கவிருக்கிறார். இவர் இந்தியில் பிரபல இயக்குநராகவும் வலம் வருகிறார். 'குருஷேத்ரா', 'நிடான்', 'பிதா' உள்ளிட்ட 23 படங்களை இவர் இயக்கியுள்ளார். 'ஸ்லம் டாக் மில்லியனர்', 'ரெடி', தமிழில் 'ஆரம்பம்' படத்திலும் நடித்து இருக்கிறார். இவருடன் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாசர், கருணாஸ் ஆகியோரும் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்குவதாக இருந்தது. ஆனால், அதற்கு முன்னதாக ஏப்ரல் 1ஆம் தேதியே படப்பிடிப்பை சென்னையில் தொடங்க இருக்கின்றனர்.
'இருமுகன்' படத்தில் இடம்பெறும் காட்சியில் விக்ரம்.