சென்னை: எதிர்வரும் 23 அல்லது 29ஆம் தேதியில் அதிமுக வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 23ஆம் தேதி நிறைந்த பௌர்ணமி என்பதுடன் முருகப்பெருமானுக்கு உகந்த பங்குனி உத்திர திருநாளாகும். எனவே அன்றைய தினம் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது நல்லது என சோதிடர்கள் கூறிய ஆலோசனையை ஜெயலலிதா பின்பற்றுவார் எனக் கூறப்படுகிறது. இல்லையெனில் 23ஆம் தேதி தேர்தல் அறிக்கையையும் 29ஆம் தேதி வேட்பாளர் பட்டியலையும் அவர் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து ஏப்ரல் 2ஆம் தேதி ஜெயலலிதா தேர்தல் பிரசார பயணத்தை தொடங்க உள்ளார்.
இந்நிலையில் அதிமுக அணியில் இடம்பெற விரும்பும் தமாகா, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர்கள், முதல்வர் ஜெயலலிதாவின் அழைப்புக்காகக் காத்திருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நேற்று மாலை வரை அத்தகைய அழைப்பு ஏதும் வரவில்லை என அக்கட்சியினர் தெரிவித்தனர்.