இரு வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு கிலோ கஞ்சாவும் மற்ற போதைப் பொருட்களும் பிடிபட்டன என சிங்கப்பூர் போலிஸ் படை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு நடத்திய இரு வெவ்வேறு திடீர் அதிரடி நடவடிக்கையில் போதைப் பொருட்கள் (படம்) சிக்கியதுடன் போதைப் பொருள் கடத்திய சந்தேகத்தின் பேரில் மூன்று ஆடவர்களும் கைது செய்யப் பட்டனர்.
மார்ச் 15ஆம் தேதி நண்பகலில் மார்சிலிங்கில் உள்ள ஒரு வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதில் போதைப் பொருள் கடத்திய சந்தேகத்தின் பேரில் இரு சிங்கப்பூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். ஒருவருக்கு வயது 41, மற்றவருக்கு 42. அந்த வீட்டை சோதனை செய்ததில் 940 கிராம் கஞ்சாவும் சிறு அளவு 'ஐஸ்', ஹெராயின் ஆகிய போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அதே நாளில் நடத்த இரண்டாவது சம்பவத்தில் உட்லண்ட்ஸில் நடத்தப்பட்ட சோதனையில் 29 வயது நிரம்பிய சிங்கப்பூர் ஆடவரை போதைப் பொருள் கடத்திய சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் கைது செய்தனர். அவர் இருந்த வீட்டைச் சோதனை செய்தபோது அதில் ஒரு கிலோ கஞ்சாவும் மற்ற போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவங்கள் குறித்து போலிஸ் விசாரனை நடத்தி வருகிறது. சிங்கப்பூரில் 500 கிராமுக்கு மேல் கஞ்சா போதைப் பொருள் கடத்தும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.