புதிய பிடாடாரி குடியிருப்புப் பேட்டையில் ஒரு பூங்காவையும் பேருந்து நிலையத்தையும் அமைப்பதற்காக அப்பர் அல்ஜுனிட் ரோட்டின் ஒரு பகுதி மூடப்படும் (படம்). தற்போது அப்பர் அல்ஜுனிட் சாலையை இணைக்கும் அப்பர் சிராங்கூன் சாலையின் கிட்டத்தட்ட 500 மீட்டர் தூர பகுதி மூடப்பட்டு அதற்கு பதில் மாற்று சாலை சற்று தள்ளி அமைக்கப்படும். இந்தப் புதிய சாலை உட்லேய் எம்ஆர்டி நிலையத்திற்குப் பிறகு பொத்தோங் பாசிர் வாட்டாரத்தை நோக்கிச் செல்லும் வழியில் தொடங்கி அப்பர் அல்ஜுனிட் சாலையுடன் இணையும்.
இவ்வாண்டு இறுதியில் புதிய பாதை திறக்கப்பட்டு தற்போது உள்ள பாதை மூடப்படும் என்று வீவக தெரிவித்தது. மூடப்பட்ட சாலை பாதசாரிகள் நடக்கும் இடமாக மாற்றப்படும். மேலும் பிடாடாரி பேட்டையில் சைக்கிளோட்டிகளுக்கான தடமும் இடம்பெறும். அத்துடன் தெற்கில் காலாங் பூங்காவையும் வடக்கில் சுங்கை சிராங்கூன், பொங்கோல் பூங்கா ஆகியவற்றையும் இணைக்கும் பூங்கா இணைப்புப் பாதை அமையும். அப்பர் அல்ஜுனிட் சாலை மாற்றி அமைக்கப்படுவதால் உட்லேய் எம்ஆர்டி அருகே எதிர்காலத்தில் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்தையும் உருவாக்க வழிவகுக்கும்.