அமரர் லீ குவான் இயூவின் முதலாம் நினைவு நாளையொட்டி லீ தம்பதியரின் மேடம் டுசாட் மெழுகுச் சிலைகள் செந்தோசா 'இம்பியா லுக்கவுட்' வளாகத்திலுள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் என்று மேடம் டுசாட் அமைப்பு தெரிவித்துள்ளது. இம்மாதம் 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை பார்வையாளர்கள் அந்தச் சிலைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவர். அங்கு செல்கிறவர்கள் மரியாதை செலுத்தும் வகையில் பூக்களைக் கொண்டு வரவும் அனுமதி உண்டு. மேடம் டுசாட் அருங்காட்சியகத்தில் அமரர் லீ பற்றிய சிறப்பு புத்தகம் ஒன்றும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படிருக்கும்.
திருமதி லீயின் உறவுக்காரப் பெண் ஒருவர் 2008ஆம் ஆண்டு அன்பர் தினத்தில் எடுத்த லீ தம்பதியின் புகைப்படத்தை அடிப்படையாக வைத்து 2014ஆம் ஆண்டில் அந்த மெழுகுச் சிலைகள் உருவாக்கப்பட்டன. அதனை அடுத்து 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அந்தச் சிலைகள் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டன.
திருமதி லீயின் உறவினர் எடுத்த புகைப்படத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட லீ தம்பதியரின் மெழுகுச் சிலைகள். படம்: மேடம் டுசாட், சிங்கப்பூர்