சென்றாண்டு அமரர் லீ குவான் இயூவின் இறுதி யாத்திரையில் அரசு மரியாதை செலுத்தப்பட்ட போது விண்ணை நோக்கி செலுத்தப்பட்ட 21 பீரங்கி குண்டுகளின் கூட்டை வைத்து உருவாக்கப்பட்ட நினைவுப் பொருட்கள் மக்கள் கழகம் உள்ளிட்ட 21 அமைப்புகளுக்கு வழங்கப்பட்டன. மக்கள் கழகத் துணைத் தலைவரும் பிரதமர் அலுவலக அமைச்சருமான சான் சுன் சிங் மக்கள் கழகத்தின் சார்பில் அந்த நினைவுப் பொருளைப் பெற்றுக் கொண்டார். "வரும் தலைமுறை களில் ஒவ்வொருவரும் கழகத்தின் நிறுவனரான அமரர் லீயின் 'ஒரே மக்கள், ஒரே நாடு' என்ற கோட்பாட்டைப் பின்பற்றுவதை நாம் உறுதி செய்ய வேண்டும்," என்றார் சான் சுன் சிங்.
மக்கள் கழகத்தைச் சேர்ந்த 600 ஊழியர்கள், அடித்தளத் தலைவர்கள், தொண்டூழியர்கள் ஆகியோர் கிங் ஜார்ஜ் அவென்யூ வில் இருக்கும் கழகத்தின் தலைமையகத்தில் நேற்று நடந்த அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சிங்கப்பூர் ஆயுதப்படை, சிங்கப்பூர் போலிஸ் படை, நாடாளுமன்றம், தேசிய பூங்கா கழகம், ஊழல் குற்றத் தடுப்புப் பிரிவு, வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், பொதுப் பயனீட்டுக் கழகம், சிங்கப்பூர் நீர் வாரியம் உள்ளிட்ட 21 அமைப்புகளுக்கு நினைவுப் பொருள் வழங்கப்பட்டது.