மியூனிக்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்தாட்ட தொடரில் பயர்ன் மியூனிக்கும் யுவெண்டசும் நேற்று இரண்டாவது சுற்று ஆட்டத்தில் மோதின. சொந்த மண்ணில் நடந்த ஆட்டத்தில் யுவெண்டசை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந் தது பயர்ன் மியூனிக் குழு. இரு அணிகளும் கூடுதல் நேரத்திற்கு முன்புவரை 2-2 என்ற கோல்கணக்கில் சமநிலையில் இருந்தன. ஆட்டத்தின் முதல் பாதியில் பயர்ன் குழு கோல் எதுவும் அடிக்கவில்லை ஆனால் யுவெண்டஸ் 2 கோல்கள் முன்னிலையில் இருந்தது. இரண் டாவது பாதி ஆட்டத்தின்போது வெகுண்டெழுந்த பயர்ன் குழு இரண்டு கோல்களை அடித்து ஆட்டத்தை சமன் செய்தது. கூடுதல் நேரத்தில் கிடைத்த வாய்ப்பைச் சரியாக பயன்படுத்தி 108வது நிமிடத்தில் தியாகோவும் 110வது நிமிடத்தில் கோமனும் அடித்த இரண்டு கோல்களே பயர்ன் மியூனிக் குழுவிற்கு வெற்றியைத் தந்தது.
இவ்விரு குழுக்களும் மோதிய முதல் சுற்று ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. மொத்த கோல் எண்ணிக்கை அடிப்படையில் 6-4 என்று முன்னிலை பெற்ற பயர்ன் காலிறுதிக்குள் நுழைந் தது. மேலும், சொந்த மண்ணில் நடந்த கடைசி 10 ஆட்டங்களிலும் பயர்ன் மியூனிக் தொடர்ந்து வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் பெப் கார்டியோலாவின் பயர்ன் மியூனிக் இரண்டு புதிய சாதனைகளைப் படைத்து உள்ளது. அதாவது, சாம்பியன்ஸ் லீக் தொடரில் 15வது முறையாக காலிறுதிக்குச் செல்லும் ஒரே குழு. மற்றொன்று, சொந்த மண்ணில் நடந்த கடைசி ஏழு ஆட்டங்கள் ஒவ்வொன்றிலும் குறைந்தது 3 கோல்கள் அடித்தது. கடந்த பருவத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்த யுவெண்டசுக்கு, இந்த முறை காலிறுதிக்குகூடச் செல்ல முடியாமல் வெளியேறிய இந்த தோல்வி கசப்பான ஒன்றாகும்.
பயர்ன் மியூனிக் குழுவின் மத்திய திடல் ஆட்டக்காரர் தாமஸ் முல்லர் உதைக்கும் பந்தைத் தடுக்கப் பார்க்கும் யுவெண்டசின் ஹெர்னானேஸ். படம்: ஏஎஃப்பி