சென்னை: தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த 30 ஆண்டுகளாக கொள்ளை, வழிப்பறி ஆகியவற்றில் கலக்கி வந்த பெண் இப்போது போலிசிடம் வசமாக சிக்கியுள்ளார். கொள்ளையடிக்கும் பணத்தைச் சேர்த்து வைத்து ஒரு பெரிய பண்ணை வீடே கட்டி சொகுசாக வாழ்க்கை நடத்துவதாக அவரே பரபரப்பாக போலிஸ் விசாரணையில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் எல்லம்மா (வயது 45). வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா ஆலமரத்து அருகே உள்ள மதுரா கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் மீது தமிழகம் முழுவதும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. சென்னையில் தேனாம்பேட்டை, மாம்பலம், அசோக்நகர், வட பழனி, வளசரவாக்கம், சாஸ்திரி நகர், குமரன் நகர் ஆகிய காவல்துறை நிலையங்களில் இவர் மீது கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவர் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய கொள்ளைக்காரியாக வலம் வந்துள்ளார். ஆனால், காவல்துறையினரை கைக்குள் போட்டுக்கொண்டு பிணையில் வெளிவந்து விடுவார். இவர் தனது உண்மையான வீட்டு முகவரியைக் கொடுக்கமாட்டார். பொய்யான முகவரியைக் கொடுத்துத் தப்பித்து வந்தார். அண்மையில் வடபழனி முருகன் கோயிலில் வயதான பெண்களின் கவனத்தைத் திசை திருப்பி, நகைகளைப் பறித்துச்சென்றுவிட்டார். இவர் நகைகளைக் பறிக்கும் காட்சி கண்காணிப்புக் கருவியில் பதிவாகி இருந்தது. புகைப்படக் கருவியின் காட்சிகளைப் பார்த்து போலிசார் இவரை அடையாளம் கண்டனர். இவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக் கப்பட்டது. இவரைப் பிடிப்பதற்காக தனி காவல்துறை படை அமைக்கப்பட்டது.