நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட வேதிப் பொருட்களின் அளவு அதிகமாக இருப்பதாக;f கூறி இந்தியாவில் சென்ற வாரம் 350க்கு மேற்பட்ட மருந்து, மாத்திரைகளுக்குத் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்தத் தடை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மருந்துக்கடைகளும் கடைப்பிடிக்கின்றனவா என்பதை உறுதிப் படுத்துவதற்கு முன்னர் மேலும் 1,200 மருந்து, மாத்திரைகளைத் தடை செய்வது பற்றி இந்திய சுகாதாரத் துறை பரிசீலித்து வருகிறது. மூளைக்குப் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய சில வகை மயக்க மருந்துகளும் அவற்றில் அடங்கும். கலப்பு மருந்துகளில் இது வரையிலும் சுமார் 6,600 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் நிர்ணயிக்கப்பட்ட விகிதப்படி கலக்கப்படாத மருந்துகள் அடையாளம் காணப்பட்டு 'பி' என தரம் பிரிக்கப்பட்டன.
அவ்வாறு அடையாளம் காணப்பட்ட 1,200 'பி' தர வரிசை மருந்துகள் விரைவில் தடை செய்யப் படலாம் என இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டுக் கழகம் தெரிவித்துள்ளது. சிகிச்சைக்கு ஏற்புடையதாக இல்லாமல், எந்தவிதப் பயனும் இல்லாத, நிர்ணயம் செய்யப்பட்ட அளவை ஒத்துப்போகாத, ஒன்றுக்கும் மேற்பட்ட மூலக்கூறுகள் சேர்ந்த கூட்டு மருந்துகளுக்குத் தடை விதிக்கப்படுவதாக இந்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. வலி நிவாரணி, சளி, இருமலுக்கான மருந்துகள், நோய் எதிர்ப்புக்கான மருந்துகள், குறிப்பிட்ட சர்க்கரை நோய் மருந்துகள் உள்ளிட்டவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ளதால் அவற்றைக் கையாள்வதில் மருந்து விற்பனையாளர்களுக்குப் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன. "ஒவ்வொரு மருந்து விற்பனைக் கடையிலும் 400, 500 வணிகப் பெயர்களில் சுமார் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் மருந்துகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும். அவை அனைத்தையும் ஆராய்ந்து நீக்குவது மிகவும் சிரமமான பணியாகும். தமிழகத்தில் சுமார் 40 ஆயிரம் மருந்துக் கடைகள் உள்ளன.
"இவை அனைத்திலும் உள்ள மருந்துகளின் மூலக்கூறு கலவைகளை ஆராய்ந்து நீக்கும்போது, பொதுமக்களுக்கு மருந்துகள் வழங்குவதில் சிக்கல் ஏற்படும். இதனால் இந்தத் தடையை அமல்படுத்துவதற்கு 6 மாதம் கால அவகாசம் கேட்டு மத்திய சுகாதாரத் துறைக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது," என்று தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் என்.ஆனந்தன் தெரிவித்தார். இந்நிலையில் ஏற்கெனவே 350 மருந்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் ரூ.2,700 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இப்போது மேலும் 1,200 மருந்துகள் தடை செய்யப்பட்டால் ரூ.7,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் ஏற்கெனவே 350 மருந்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் ரூ.2,700 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இப்போது மேலும் 1,200 மருந்துகள் தடை செய்யப்பட்டால் ரூ.7,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.
பெங்களூரில் உள்ள ஒரு மருந்துக்கடை. கோப்புப்படம்: ஊடகம்