புதுடெல்லி: இந்தியாவில் ஏராளமான சொத்துகள் இருந்தும் வங்கிக் கடனைத் திருப்பி செலுத்தாமல் இருக்கும் விஜய் மல்லையாக்களின் எண்ணிக்கை 5,275 என்றும் அவர்கள் ஏப்பம் விட்டிருக்கும் தொகை மொத்தம் ரூ.56,521 கோடி என்றும் புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. வங்கியில் ரூ.7,000 கோடி கடன் வாங்கி ஏமாற்றிவிட்டதாக விஜய் மல்லையாவை பற்றி செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவில் கணக்கே இல்லாமல் சொத்துகள் இருந்தும் வாங்கிய வங்கிக் கடனைத் திருப்பி செலுத்த விரும்பாத பணக்காரர் கள் மொத்தம் 5,275 பேர் என்கிறது அந்தப் புள்ளி விவரம்.
நிலுவைத் தொகைகள் குறித்த துல்லியமான புள்ளி விவரங்களைப் பதிவு செய்து வரும் சிபில் அமைப்பு, வங்கிகளில் கடன்களைத் திரும்ப செலுத்தத் தவறியவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றியோர் எண்ணிக்கை கடந்த 13 ஆண்டுகளில் 9 மடங்கு அதிகரித்திருப்பதும் அவர்கள் செலுத்த வேண்டிய தொகையானது மத்திய அரசு 2016=17ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஒட்டு மொத்த வேளாண் துறைக்கு ஒதுக்கிய ரூ.35,894 கோடியை விட 1.5 மடங்கு அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடன்காரர்கள் அனைவரும் வங்கியில் வாங்கிய கடனைத் திருப்பி செலுத்தும் சக்தி இருந்தும் கடனைத் திருப்பி செலுத்தாமல் இருப்பவர்களாக வங்கி அறிவித்துள்ளது.