ரூர்க்கி: 'இந்தியாவில் தயாரிப்போம்' இயக்கத்தின் இலக்கு முக்கியம் என்ற போதிலும் ராணுவத்தின் தயார் நிலைக்குதான் எப்போதும் முன்னுரிமை என்று இந்திய தற்காப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் கூறியுள்ளார். ரூர்க்கியில் உள்ள ஐஐடி மூன்று நாள் தொழில்நுட்ப விழாவின் தொடக்க நாள் அன்று பேசிய அமைச்சர், "போதிய கருவிகள் நமக்குத் தேவை. அதை நாம் மாற்றமுடியாது. 'இந்தியாவில் தயாரிப்போம்' இயக்கத்தின் இலக்கு முக்கியம் என்றாலும் ராணுவத்தின் தயார் நிலைதான் எப்போதுமே முன்னுரிமை பெறும். ஏனெனில், ராணுவத்தின் முதல் பணியே அதுதான். அச்சுறுத்தும் பார்வையுடன் அண்டை நாடுகள் நம்மை பார்க்கக்கூடாது," என்று கூறினார். தற்காப்புத் துறையின் 'இந்தியாவில் தயாரிப்போம்' முயற்சி குறித்த கலந்துரையாடலில் பரிக்கர் பங்கேற்றார்.
இதற்கிடையே, ராணுவத்தின் மேம்பாட்டுக்காக மொத்தம் ரூ. 15,000 கோடி நிதி ஒதுக்கப் பட்டு உள்ளது. 1.18 மில்லியன் பேரைக் கொண்ட இந்திய ராணுவம் பல பிரிவுகளில் செயல் முறை, உள்கட்டுமானக் குறை பாடுகளுடன் திணறி வருகிறது. இந்நிலையில் ஏவுகணை, வெப்ப நுண்ணுணர் கருவிகள், ஆயுதங்களைக் கண்டறியும் ராடார்கள், பல ஏவுகணைகளைச் செலுத்தும் கருவிகள் உள்ளிட்ட வற்றை வாங்க ராணுவத்துக்கு நிதி ஒதுக்கப்படவுள்ளது.