நாய்கள், பூனைகளுக்கும் புதிய ரத்த தான பதிவகம் ஒன்று எதிர்வரும் 26ஆம் தேதி சனிக்கிழமை நடக்கவிருக்கும் செல்லப்பிராணிகள் கண்காட்சி யில் அறிமுகமாகவிருக்கிறது. சிங்கப்பூரின் ஆகப் பெரிய மிருக மருத்துவ குழுமமான மவுண்ட் பிளசண்ட் வெட்டரினரி குரூப் இந்தக் கண்காட்சியை நடத்துகிறது. வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் புதிய ரத்தப் பதிவகத் திட்டம் தொடங்கவிருக்கிறது. இதில் இரத்தம் கொடுக்கக் கூடிய நாய்கள், பூனைகளின் உரிமை யாளர்களின் விவரங்கள் கொண்ட பட்டியல் உருவாகவுள்ளது.
பல மிருக மருந்தகங்களில் தேவைப்படும்போது எடுத்துக் கொள்ள ஆரோக்கியமான நாய்கள், பூனைகளின் பட்டியல் இருந்தாலும் இப்போதுதான் அதிகாரபூர்வமான ஒரு பதிவகம் அறிமுகமாகிறது. புதிய திட்டத்தின் கீழ் ரத்தம் தேவைப்படும்போது பதிவகத்தில் இருக்கும் நாய்கள், பூனைகளின் உரிமையாளர்கள் தொடர்பு கொள்ளப்படுவார்கள். தங்கள் செல்லப் பிராணிகளை இலவச ரத்த தான சோதனைக்கு உள்ளாக்கி ரத்த தானம் கொடுக்க முன்வரும் உரிமையாளர்களின் மருந்தகக் கணக்கில் $100 ஊக்கத் தொகையும் வழங்கப்படும்.
ரத்த தானம் கொடுக்கும் நாய்களும் பூனைகளும் சில விதிமுறைகளுக்கு உட்படும். அவற்றில் ஒன்று ரத்த தானம் கொடுக்கும் நாய்களும் பூனைகளும் ஒன்று முதல் எட்டு வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் நாய்கள் 20 கிலோ எடைக்கு மேலும் பூனைகள் 5 கிலோ எடைக்கு மேலும் இருக்கவேண்டும். இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்த தானம் கொடுக்கலாம். மிருகங்கள் கடுமையான நோய் வாய்ப்பட்டிருக்கும்போது குறிப்பாக முக்கியமான அறுவை சிகிச்சையின்போது அம்மிருகங் களின் உயிரைக் காப்பாற்ற 24 மணி நேரத்திற்குள் ரத்தம் தேவைப்படுகிறது.
கடந்த ஆண்டில் நடைபெற்ற செல்லப்பிராணிகள் கண்காட்சியில் நாய்கள் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றன. கோப்புப்படம்