சுதாஸகி ராமன்
ஐந்து வயதிலிருந்து பரதநாட்டியக் கலையைக் கற்றுக்கொள்ளத் தொடங்கிய சுருதி நாயர், 18, நடனத்தின்மீது கொண்ட விருப்பத்தின் காரணமாக சிங்கப்பூர் கலைப் பள்ளியில் சேர்ந்தார். அங்கு 'இண்டர்நேஷனல் பேக்கலரேட் (ஐபி)' பட்டயக் கல்வியில் நடனத்தை சிறப்புத் தெரிவுப் பாடமாகப் பயின்றார். பள்ளியில் 'பாலே', 'கான் டெம்பொரெரி', 'ஜாஸ்' போன்ற மேற்கத்திய நடனங்களுடன் சீன, மலாய் நடனங்களையும் கற்றுக்கொண்ட அவர், படிப்பிலும் அதே அளவு அக்கறை செலுத்தி 'ஐபி' பாடத்திட்டத்தின் இறுதியாண்டுத் தேர்வுகளில் ஒருவர் பெறக்கூடிய அதிகபட்ச புள்ளிகளான 45க்கு 37 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற 'ஐபி' தேர்வுகளில் நடனத்துடன் சேர்த்து எட்டு பாடங்களில் சிறந்த தேர்ச்சி பெற்ற ஸ்ருதி, சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தில் சமுதாய, கலாசார மானிடவியல் துறையில் பயிலத் திட்டமிட்டுள்ளார். தமது உணர்ச்சிகளைத் துணிச்சலாக வெளிப்படுத்தும் தளமாக நடனத்தைக் கருதும் ஸ்ருதி, "நடனத்தில் மேலும் பலவற்றைக் கற்றுக்கொண்டு, இன்னும் சிறப்பாகப் பயிற்சி பெற்று திறன்களை வளர்த்துக்கொண்ட பிறகே நடனத் துறையில் சாதிக்க ஆசைப்படுகிறேன்," என்றார்.