வெய்யில் சுட்டெரிக்கும் இந்தக் காலக்கட்டத்தில் விஜய் சேதுபதிக்கு மட்டும் அடைமழை பெய்து அவரைக் குளிர வைத்துக்கொண்டிருக்கிறது. படத்திற்குப் படம் அவர் வெற்றி வாகையைச் சூடி வருவதைப் பார்த்து வளர்ந்து வரும் நாயகர்கள் பொறாமையில் பெருமூச்சு விடுகிறார்கள். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த படம் 'நானும் ரவுடிதான்'. இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதனால் அதே கூட்டணியை வைத்துத் தனது அடுத்த படத்தை இயக்குவதற்கான வேலைகளைத் தொடங்கியிருக்கிறார் விக்னேஷ் சிவன். அதோடு, புதிய படம் இரண்டு கதாநாயகிகளைக் கொண்ட கதை என்பதால் இதுவரை இணைந்து நடிக்காத திரிஷா, நயன்தாரா ஆகிய இருவரையும் அந்தப் படத்தில் இணைக்க முயற்சி எடுத்தார் விக்னேஷ் சிவன்.
ஆனால், அதுகுறித்துத் திரிஷாவை அவர் அணுகியபோது, கதையைக்கூடக் கேட்காமல் தான் பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருப்பதால் நாட்கள் ஒதுக்கமுடியாது என்று சொல்லி நழுவி விட்டாராம். அதனால் வேறு சில முன்னணி நடிகைகளிடம் தேதிகள் கேட்டு வந்த அவர், தற்பொழுது ஏமி ஜாக்சனை ஒப்பந்தம் செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆக, ஆரம்பத்தில் பிரபலமில்லாத கதாநாயகிகளுடன் நடித்து வந்த விஜய் சேதுபதி, 'நானும் ரவுடிதான்' படத்தில் நயன்தாராவுடன் நடித்த பிறகு 'தர்மதுரை'யில் தமன்னாவுடன் நடித்திருக்கிறார். தற்போது 'ஆண்டவன் கட்டளை'யில் ரித்திகா சிங்குடன் நடித்து வருகிறார். அவரைத் தொடர்ந்து ஏமி ஜாக்சனுடனும் நடிக்கப்போகிறார். இதேபோல் அவரது புதிய படங்களிலும் புகழ்பெற்ற கதாநாயகிகளாக ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகின்றனர். நயன்தாராவுடன் நடிக்கமாட்டோமா என்று ஏங்கிக்கொண்டு இருக்கும் வளர்ந்து வரும் நடிகர்கள் இரண்டு முன்னணி நடிகைகளுடன் நடிக்க இருக்கும் விஜய் சேதுபதிக்கு அடித்த யோகத்தை நினைத்து பெருமூச்சு விட்டு கோடம்பாக்கத்தை இன்னும் அதிக சூடாக்கிக்கொண்டு இருக் கிறார்களாம்.