மதுரை: தமிழக அமைச்சர்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கையில் ஜெயலலிதா வின் நிலைப்பாடு ஏற்கக் கூடியதல்ல என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், ஊழல் குறித்து பேச பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணிக்கு எந்தவித தகுதியும் இல்லை என்றார். "தற்போது அமைச்சர்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக அதிமுக தலைமை உரிய விளக்கமளிக்க வேண்டும். முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டபோது, முதல்வருக்குத் தெரியாமல் எதுவும் நடக்காது என தெளிவாகக் கூறியிருந்தார்.
இந்நிலையில் அமைச்சர்கள் செய்யும் தவறுகள் தனக்குத் தெரியாமல் நடப்பதுபோல் ஜெயலலிதா காட்டிக்கொள்வது ஏற்கத்தக்கதல்ல," என்றார் கனிமொழி. ஊழல் வழக்கு தொடர்பாக அன்புமணி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், வழக்கை எதிர்கொண்டுள்ள அன்புமணிக்கு திராவிட கட்சிகளை விமர்சிக்க உரிமை இல்லை என்றார். பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது என்று கனிமொழி மேலும் கூறினார்.