நிலநீர் கெடுதல் தொடர்பிலான ஆய்வுகளில் முன்னோடியான கனடாவைச் சேர்ந்த ஆயுட்கால தனிச் சிறப்புப் பேராசிரியர் ஜான் அந்தோணி செர்ரி, சிங்கப்பூரின் லீ குவான் இயூ தண்ணீர் விருதைப் பெற்றிருக்கிறார். தனிச்சிறப்புப் பேராசிரியர் செர்ரி, வாட்டர்லூ பல்கலைக் கழகத்தின் புவி, சுற்றப்புற அறிவியல் துறையைச் சேர்ந்தவர். நிலநீர் அறிவியல், கொள்கைகள், தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கு ஆற்றிய தொண்டுகளுக்காக இவருக்கு விருது கிடைத்துள்ளது. சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூவின் பெயரிலான இந்த விருது, 2008 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை வழங்கப்பட்டு வருகிறது. புத்தாக்க தொழில்நுட்பங்கள், கொள்கைகள், செயல்திட்டங்கள் ஆகியவற்றை அமலாக்கி அல்லது உருவாக்கி அதன் மூலம் உலக தண்ணீர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயலும் தனிப்பட்டவர்கள், நிறுவனங்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
மண்ணுக்கும் கருங்கல் துகள்களுக்கும் இடையில் காணப்படும் நிலநீர், உலகில் பயன்படுத்தத்தக்க தண்ணீரில் 95%ஆக இருக்கிறது. இருந்தாலும் வேளாண்மை நடைமுறைகள், எரிசக்தி உருவாக்கம் போன்ற செயல்கள் காரணமாக அந்தத் தண்ணீர் கெட்டுப்போவதுண்டு. இப்படி கெடும் நீரை நன்னீராக்குவதற்குப் பேராசிரியர் செர்ரி தொண்டாற்றி இருக்கிறார். அமெரிக்கா, பிரேசில், சீனா போன்ற நாடுகளில் நிலநீர் மாசுபடும் பிரச்சினை இருக்கிறது. பேராசிரியர் செர்ரியின் பணிகள் காரணமாக உருவான தொழில்நுட்பங்களும் துப்புரவு நடைமுறைகளும் இத்தகைய நாடுகளில் பயன் படுத்தப்பட்டு நிலத்தடி நீர் சுத்தப்படுத்தப்படுகிறது.
நிலநீர் கெடுதல் தொடர்பிலான ஆய்வுகளில் முன்னோடியான கனடாவைச் சேர்ந்த ஆயுட்கால தனிச்சிறப்புப் பேராசிரியர் ஜான் அந்தோணி செர்ரி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்