வரிசையாக வெற்றிப் படங்களில் நடிப்பதுடன், மேலும் பல புதுப் படங்களிலும் ஒப்பந்தமாகி உள்ளார் இளம் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ். கால்ஷீட் ஒதுக்க முடியாத அளவிற்குப் பரபரப்பாக இருக்கும் இந்த வாழ்க்கையைத்தான் விரும்புவதாகச் சொல்கிறார். "நடனத்தின் மீது மிகுந்த காதலுடன் இருந்தபோதுதான் நடிக்க வேண்டும் எனும் ஆசை வந்தது. நடிக்க வாய்ப்பு கேட்டு நிறைய சினிமா நிறுவன அலுவலகங்களின் படிகளில் ஏறி இறங்கியுள்ளேன். பல இயக்குநர்களைச் சந்தித்துள்ளேன். யாரேனும் ஒருவராவது வாய்ப்புத் தரமாட்டார்களா என மனம் ஏங்கும். அப்படிப்பட்ட காலம் மறைந்து, இப்போது ஐந்து ஆண்டுகளாக சினிமாவில் தீவிரமாக நடித்துக்கொண்டிருப்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது," என்கிறார் ஐஸ்வர்யா.
சரி... சினிமா கனவு எப்படி நிறைவேறியது. "கல்லூரியில் படிக்கும்போதே நடிப்பின் மீது ஆசை வந்துவிட்டது. அலைந்து திரிந்து ஒருவழியாக 'அவர்களும் இவர்களும்' என்ற படத்தில் நடித்தேன். அந்தப் படம் வந்ததே பலருக்குத் தெரியாது. அவ்வளவு தான் நம்ம சினிமா வாழ்க்கை என்று நினைத்தபோது தான் 'அட்டகத்தி' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சின்ன வேடம் என்றாலும் பசங்க மனதில் ஓரிடத்தைப் பிடித்தேன் எனலாம். திருப்புமுனையாகவும் அமைந்தது. "அடுத்து விஜய் சேதுபதியுடன் 'ரம்மி', 'பண்ணையாரும் பத்மினியும்',
மணிகண்டன் இயக்கிய 'காக்கா முட்டை' என பல நல்ல படங்கள் அமைந்தன. இப்போது 'நன்றாக நடிக்கிறாய்' என எல்லோரும் சொல்கிறார்கள். அதைக் கேட்கவே உற்சாகமாக உள்ளது. இதுக்குத்தானே இந்த ஐஸ்வர்யா ஆசைப்பட்டாள்...!" விஜய் சேதுபதியுடன் அடுத்தடுத்து நான்கு படங்களில் நடித்துவிட்டீர்களே? "ஆமாம்... ஒவ்வொரு படத்திலும் என்னை நடிக்க அழைக்கும் முன்னே, 'ஏற்கெனவே இருவரும் சேர்ந்து நடித்துள்ளனரே' என்றுதான் இயக்குநர்கள் யோசிப்பார் கள். ஆனால், எங்களைத் திரையில் காணும்போது எல்லாமே புதிதாக இருக்கும். அதுதானே முக்கியம்? 'ரம்மி' படத்தின் படப்பிடிப்பில்தான் விஜய் சேதுபதியை முதன்முதலாப் பார்த்தேன். 'கூடமேல கூட வெச்சு...' பாடலை காட்சிப்படுத்தினர். நான் கையில கூடையைத் தூக்கிக்கொண்டு வெட்கப்பட்டு அவரைப் பார்த்து சிரித்தபடியே நடந்து வரவேண்டும்.