சிங்கப்பூரின் தண்ணீர்த் தேவையை 60%க்குப் பூர்த்தி செய்யும் ஜோகூரின் லிங்குவி ஏரி வறண்டு வருகிறது. அதில் நீர்மட்டம் 42%க்குக்கு குறைந்துவிட்டது. இதுவரையில் சென்ற ஆண்டில்தான் அங்கு நீர்மட்டம் வரலாறு காணாத அளவுக்கு இறங்கி 41%ஐத் தொட் டது என்பது குறிப்பிடத்தக்கது. சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் சுல்கிஃப்லி நேற்று இந்த விவரங்களைத் தெரிவித்தார். உலக தண்ணீர் தினத்தை யொட்டி இலியாஸ் பார்க் தொடக் கப்பள்ளியில் நேற்று தண்ணீர் விநியோகப் பயிற்சி நடந்தது. அதில் கலந்துகொண்டு அமைச்சர் பேசி னார்.
சிங்கப்பூரிலும் இந்த வட்டாரத் திலும் 2014 முதலே வறட்சியான பருவநிலை நிலவுகிறது. இதன் காரணமாக ஜோகூர் ஏரியில் நீர் மட்டம் சீராகக் குறைந்துவருகிறது. தண்ணீர் அளவு ஆகஸ்டில் 54%க்கு இறங்கியது. அது முதல் மட்டம் உயரவே இல்லை. பிறகு நீர்மட்டம் சென்ற நவம்பரில் 43%க்குக் குறைந்தது. ஜனவரியில் 50%க்கு உயர்ந்த மட்டம் பிறகு 42%க்கு இறங்கிவிட்டது. அந்த ஆற்றில் இருந்து சிங்கப் பூர் நாள் ஒன்றுக்கு 350 மில்லியன் கேலன் தண்ணீரைப் பெற முடியும். ஆனால் இந்த ஆண்டில் நான்கு தடவை இடையூறுகள் ஏற்பட்டு விட்டன. நாட்டின் தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் சிங்கப்பூரின் பொதுப் பயனீட்டுக் கழகம் மார்ச்சில் நாள் ஒன்றுக்கு 16 மில்லியன் கேலன் நியூவாட்டரை இங்குள்ள நீரத்தேக்கத்துக்கு அனுப்பியது.
சுற்றுப்புற நீர்வள அமைச்சர் மசகோஸ் சுல்கிஃப்லி நேற்று இலியாஸ் பார்க் தொடக்கப்பள்ளியில் நடந்த தண்ணீர் விநியோகப் பயிற்சியில் கலந்துகொண்டு மாணவர்களுடன் கலந்துறவாடி அவர்களிடம் தண்ணீர்ச் சிக்கனத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறினார். தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ்