சென்னை: கூட்டணிக்காக எந்தவித கொள்கை சமரசத்துக்கும் பாரதிய ஜனதா கட்சி இடம் கொடுக்காது என அதன் மாநிலத் தலைவி தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஊழல் குற்றச்சாட்டு இல்லாத ஒரே கட்சி பாஜகதான் என்றார். "இத்தகைய பெருமையுடன் தேர்தலைச் சந்திக்க தயார் நிலையில் உள்ளோம். இன்றைய தமிழக அரசியல் சூழலில் ஊழலுக்கு எதிராக வளர்ச்சியை முன்னிறுத்தி, மக்கள் நலம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது பாரதிய ஜனதா.
"மக்களின் நம்பகத்தன்மை உள்ள கூட்டணியாக எங்களோடு வரும் கட்சிகளின் துணையோடு தேர்தலைச் சந்திப்போம். ஊழல் ஓழிப்பு, நாட்டின் வளர்ச்சி என்ற குறிக்கோளுடன் கூட்டணிக்காக எந்தவித கொள்கை சமரசத்துக்கும் இடம் கொடுக்கமாட்டோம். இதில் கடைசி வரை உறுதியாக இருப்போம். தேர்தலில் நிச்சயம் பாஜக கூட்டணி வெற்றி பெறும்," என்றார் தமிழிசை.