'மிளகா', 'சேட்டை' உள்ளிட்ட படங்களின் வழி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார் சுஜா வாருணி. சிறிய வேடங்கள்தான் என்றாலும், கிடைத்த வாய்ப்பில் முத்திரைப் பதித்திருக்கிறார். அடுத்து தன் திறமைக்கேற்ப நல்ல வாய்ப்புகள் தேடி வரும் என நம்புகிறாராம். கதாநாயகிகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் உங்களுக்கும் கிடைக்கிறதா? "எனக்குத் தெரிந்து கோடம்பாக்கம் என்ற தனி உலகத்தில் நாயகன், நாயகி, குணசித்திர நடிகர்கள் என்கிற பாகுபாடெல்லாம் கிடையாது. இங்கு அனைவருமே சமம்தான். படப்பிடிப்பு என்று வந்துவிட்டால், பெரிய கதாநாயகர்களை எப்படி அக்கறையுடன் கவனித்துக் கொள்கிறார்களோ அதே போன்றுதான் பிறர் மீதும் அக்கறை செலுத்தப்படுகிறது." சில படங்களில் அற்புதமாக நடனம் ஆடியிருக்கி றீர்கள். உங்களுக்கு யார் நடனம் பிடிக்கும்? "நடனம் மீது எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு.
அதனால்தான் சில காலம் நடனத்தில் கவனம் செலுத்தினேன். விஜய் சார் நடனம் அட்டகாசம். அதேபோல் ராகவா லாரன்ஸ் நடனம் அபாரம். அவரது நடனத்தை திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டே இருப்பேன். நடிகைகளில் நான் சிம்ரன் நடனத்துக்கு தீவிர ரசிகை. இடையில் சில காலம் திரையில் பார்க்க முடியவில்லையே, எங்கே போனீர்கள்? "அந்த இடைவெளிக்கு நான் காரணம் அல்ல. என்னுடைய படங்கள் சில வெளியாகவில்லை. 'வா டீல்', 'வைகை எக்ஸ்பிரஸ்', 'அமளி துமளி', 'காதல் தீவு', 'பென்சில்' என தமிழில் மட்டும் ஐந்து படங்களில் நடித்து முடித்திருக்கிறேன். இவை எல்லாம் ஏதோ ஒரு காரணத்தால் தடைபட்டுள்ளன. "இந்த படங்கள் வெளியானப் பிறகு ரசிகர்கள் மத்தியில் எனக்கென தனி மதிப்பு உருவாகும். மேலும் எனது நடிப்பு பாராட்டப்பட்டு, நல்ல ஒரு திருப்பு முனை உண்டாகும் என நம்புகிறேன்," என்கிறார் சுஜா.