சிங்கப்பூர் காற்பந்து குழுவின் பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக பெர்ன் ஸ்டாங்க கூறியுள்ளார். கடந்த ஒரு வாரமாக சிங்கப்பூர் காற்பந்து வட்டாரத்தில் ஸ்டாங்கவின் பதவி விலகல் பற்றிய ஊக செய்தி பரவியது. அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் தனது பதவி விலகலை உறுதி செய்தார் ஸ்டாங்க. சிங்கப்பூர் தேசிய காற்பந்துக் குழுவின் தலைமை பயிற்றுவிப்பாளராக இருக்கும் ஸ்டாங்கவின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "ஆப்கானிஸ்தானுடனான போட்டிக்குப் பிறகு என்னை வைத்து எதுவும் திட்டமிட வேண்டாம் என சிங்கப்பூர் காற்பந்து சங்கத்திடம் கடந்த ஜனவரி மாதம் கேட்டுக் கொண்டேன். "குழுவில் உள்ள விளையாட்டாளர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என மிக்க கவனத்துடன் உள்ளார்கள். நான் குழுவை விட்டுச் சென்றாலும் இது என்னை பெருமையடையச் செய்கிறது," என்றார்.
மியன்மாருக்கு எதிரான இன்றைய ஆட்டம் உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்குமா எனக் கேட்டபோது, "காற்பந்தில் நமது செயல்பாட்டைப் பற்றி யாரும் குறைத்துப் பேசுவதை நான் அனுமதிக்க மாட்டேன். "உலகத் தரவரிசை என்பது கடுமையான ஒன்று. நம்முடைய குழுவில் உள்ள அனைவரும் உள்ளூர் வீரர்களே தவிர, வெளிநாட்டு வீரர்கள் யாரும் இல்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. "இரண்டு ஆட்டங்களையும் வெல்ல வேண்டும் என்பதே நோக்கம். மற்றவற்றை அதன் பிறகு பார்க்கலாம்," என்றார் அவர். இன்று இரவு ஜாலான் புசார் அரங்கில் அனைத்துலக நட்புமுறை ஆட்டமொன்றில் மியன்மாரை எதிர்கொள்கிறது சிங்கப்பூர் தேசிய காற்பந்து குழு.
காயம் காரணமாக ஒரு சில ஆட்டங்களில் மட்டுமே விளை யாடிய கைருல் நிஸாம் இன்றைய ஆட்டத்தில் விளையாட உள்ளார். கடந்த பருவத்தில் மலேசிய சூப்பர் லீக் தொடரின் 14 ஆட்டங்களில் விளையாடிய அவர் மூன்று கோல்களைப் புகுத்தினார். தற்போதைய பருவத்தில் எஸ் லீக் தொடரில் நான்கு ஆட்டங்களில் விளையாடிய அவர், மூன்று கோல்களைப் புகுத்தி யுள்ளார். இதன்பிறகு, மார்ச் 29ஆம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சிங்கப்பூர் குழு விளையாடவுள்ள 2018 உலகக் கிண்ண/2019 ஆசியக் கிண்ண தகுதிச் சுற்று ஆட்டத்திலும் நிஸாம் விளையாடுகிறார்.