மீள்திறன் மற்றும் பரிவு உணர்வுகளைக் கட்டி எழுப்பும் திட்டங் களுக்கு ஆதரவு அளிக்க 'நம் சிங்கப்பூர் நிதி' புதிதாக அமையும். குடிமக்கள் ஆதரவுத் திட்டங்களுக்காக அரசாங்கம் 25 மில்லியன் வெள்ளியை இந்த ஆண்டின் பிற்பாதியில் ஒதுக்கும். நமது பலம், நமது அன்பு ஆகியவற்றை பகிர்ந்துகொள்வதில் நாம் ஒன்றிணைந்து பங்களிப்பதைக் குறிப்பதால் இது 'நம் சிங்கப்பூர் நிதி' என்று அழைக்கப்படும் என்றார் நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட்.
கடந்த ஆண்டு நாட்டின் பொன்விழாக் கொண்டாட்டங்களுக்காக உருவாக்கப்பட்ட SG50 கொண்டாட்ட நிதியைத் தொடர்ந்து இந்த நிதி ஏற்படுத்தப்படுகிறது. அந்த நிதி கிட்டத்தட்ட 400 திட்டங்களுக்கு ஆதரவு வழங்கியது. SG50 வழிகாட்டிக் குழுவின் தலைவராக திரு ஹெங் பணியாற்றினார். இந்த ஆண்டின் பட்ஜெட்டில் இடம்பெற்ற பரிவுமிக்க சமூகத்தைக் கட்டிக்காக்கும் மூன்று அம்சங்களுள் ஒன்று 'நம் சிங்கப்பூர் நிதி'.