வில்சன் சைலஸ்
திருமணத்துக்கு முன்பு வெவ்வேறு இல்லங்களில் பெற்றோருடன் பொங்கல் கொண்டாடியவர்கள் ஒரே வீட்டில் தங்கள் முதல் பாரம்பரிய விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். கடந்த ஜூன் மாதத்தில் திருமணம் செய்துகொண்ட திரு நாராயணன் வேலாயுதம், திருமதி தேவி கணேசன் தம்பதிக்கு இது தலைப் பொங்கல். சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் என இருவகைப் பொங்கல் சமைத்து, இறை வழிபாட்டிற்குப் பிறகு மூத்தோர் ஆசி வழங்க, இத்தம்பதியின் தலைப் பொங்கல் களைகட்டுகிறது.
பொங்கல் தினத்தன்றும் வேலைக்குச் செல்ல வேண்டிய சூழல் நிலவினாலும் முறைப்படி பொங்கல் கொண்டாட இவர்கள் தவறவில்லை.
பொங்கல் கொண்டாட்டத்திற்கு உரிய சடங்குகளையும் வழக்கங்களையும் பின்பற்றுவதில் திரு நாராயணன் தம்பதி கூடுதலாகக் கவனம் செலுத்துகின்றனர். "பொங்கல் பானைக்கு மஞ்சள் கிழங்கு கட்டுதல், கோலம் போடுதல், வாழை இலையில் பொங்கல் படைத்தல், அன்றைய தினம் உற்றார் உறவினர்களிடம் நலம் விசாரிப்பதற்குப் பதில் 'பால் பொங்கிவிட்டதா' என்று விசாரித்தல் என ஒவ்வொன்றையும் வழக்கம் மாறாமல் செய்து வருகிறோம்," என்றனர் திரு, திருமதி நாராயணன் தம்பதியர்.
தமது பெற்றோர், தாத்தா திரு எஸ்.நாராயணன், பாட்டி திருமதி என்.அழகம்மை ஆகியோருடன் கூட்டுரிமை தனியார் அடுக்குமாடி வீடு ஒன்றில் தம்பதி சகிதமாக வசித்து வருகிறார் நாராயணன்.