முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யாவுக்கே கடந்த சில ஆண்டுகளாக கையில் ஒன்றிரண்டு படங்கள்தான் இருந்தன. ஆனால், விமலுக்கோ கைவசம் பத்துப் பதினைந்து படங்கள் இருந்தன. விமலின் சம்பளம் குறைவு என்பதால் தயாரிப்பாளர்கள் வரிசையாக இரண்டு வருடத்துக்கு விமலின் கால்ஷீட்டை வாங்கி விட்டனர். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. விமலின் அண்மைய படங்களான 'காவல்', 'அஞ்சல', 'மாப்ள சிங்கம்' ஆகிய படங்களின் தொடர் தோல்விகளால் அதல பாதாளத்துக்குச் சென்றிருக்கிறது அவரது மார்க்கெட்.
இதனால், 70 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த விமல், ஒரு கோடியைத் தொடுவதற்குப் பதிலாக 20 லட்சத்துக்கு இறங்கி வந்திருக்கிறார். எனவே, தயாரிப்பாளர்கள் மீண்டும் விமலை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர். 'மனுஷன் நல்ல முடிவு எடுத்திருக்காருய்யா... அவரை வச்சு படம் எடுக்கலாம்' என்று விமலை சந்திக்கச் சென்ற தயாரிப்பாளர்களுக்காகவே அழகான 'டுவிஸ்ட்' ஒன்றை வைத்திருந்தார் விமல். "சம்பளம் 20 லட்சம் கொடுங்க போதும். ஆனா, இனிமே கிராமத்துக் கதையில நடிக்க மாட்டேன். நகரத்தை மையமாகக் கொண்ட கதையைக் கொண்டு வாங்க" என்று கூறி கிராமத்துக் கதைகளில் நடிக்க மறுத்து விட்டார் விமல்.