உடல்நலக்குறைவு காரணமாக தமது தாத்தா அடிக்கடி மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்டிருந்த போது அங்கு அதிக நேரம் செலவழித்த 25 வயது பிரபு தனபாலன், நோயாளிகளுக்கு சொட்டுச் சொட்டாக ஏற்றப்படும் 'குளுகோஸ்' திரவ கருவியை தாதியர்கள் பலமுறை வந்து சோதனை செய்வதைக் கண்டார். திரவம் தீர்ந்துவிட்டதா என்பதை அறிவதற்கு தாதியர்கள் அவ்வாறு செய்தனர் என்பதை அவர் உணர்ந்தார். மேலும், திரவம் தீர்ந்துவிட்டால் அந்தக் கருவி எழுப்பும் ஒலி, அறையில் உள்ள நோயாளிகள் அனைவருக்கும் இடையூறாக இருந்துள்ளது.
இதற்குத் தீர்வு காணவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உதித்தது. அப்போது தமது தொழில்நுட்பப் பொறியியல் பட்டயக்கல்வியின் இறுதியாண்டு ஒப்படைப்பின் மூலம் தமது எண்ணத்தை நிறைவேற்ற முடிவெ டுத்தார். 'குளுகோஸ்' கருவியில் ஓர் உணர்கருவியைப் பொருத்தும் திட்டப்பணியில் பிரபு தனது இரு சக மாணவர்களுடன் ஈடுபட்டார். அதன் மூலம் திரவம் தீர்வதற்கு முன்னரே அது பற்றி வார்டுக்கு வெளியே உள்ள தாதியருக்கு சமிக்ஞை விளக்கு மூலம் தெரிவிக்கும் உணர் கருவி ஒன்றை பிரபுவும் அவரது நண்பர்களும் உருவாக்கினர்.
பெரும்பாலும் நான்கு முதல் ஒன்பது நோயாளிகள் வரை தங்கும் ஒரு வார்டில் மற்ற நோயாளிகளுக்கு இடையூறு விளைவிக்காத வண்ணம் இந்த மூவர் குழு உருவாக்கியுள்ள உணர்கருவி செயல்படும். "எனது குழுவில் யாருக்கும் நிரலிடுதல் முறை தெரியாது. பொறியியல் பின்புலம் உள்ள எங்களுக்கு கணினி குறியீடுகள் பற்றிய ஆற்றல் இல்லாத காரணத்தால் இந்தக் கருவியை உருவாக்க நாங்கள் மற்ற துறைகளில் உள்ள மாணவர்கள், விரிவுரையாளர்களின் உதவியை நாடினோம்," என்று பிரபு தெரிவித்தார்.
பாவ்மன் ஸ்பிரிங் நிறுவனத் தோடு இணைந்து சரக்கு வைக்கும் 'பேலட் லோடர்' சுமை தாங்கும் இயந்திரக் கருவியை உருவாக்கி உன்னத திட்டத்திற்கான விருதை வென்ற டேரல் டேவிட் (வலக் கோடியில்) மற்றும் அவரது குழுவினர். படம்: தொழில்நுட்பக் கல்விக் கழகம்
'குளுகோஸ்' கருவியில் உணர்கருவியைப் பொருத்தும் திட்டப்பணியை மேற்கொண்டு சிறந்த புத்தாக்க விருதை வென்ற பிரபு தனபாலனும் (நடுவில்) அவரது குழுவினரும். படம்: தொழில்நுட்பக் கல்விக் கழகம்