பால்மிரா: சிரியாவின் பழம்பெரும் நகரமான பால்மிராவை ஐஎஸ் அமைப்பிடம் இருந்து சிரிய ராணுவம் நேற்று மீட்டுள்ளதாக அரசாங்க ஊடகச் செய்திகள் தெரிவித்தன. ஐஎஸ் இயக்கத்தை ஒடுக்கும் முயற்சியில் அரசாங்கத்திற்குக் கிடைத்திருக்கும் பெரிய வெற்றி இது என ராணுவத் தகவல்கள் கூறின. ஈராக்கிலும் சிரியாவிலும் ஐஎஸ் அமைப்பின் அழிவிற்கான தொடக்கம் என்று சிரிய தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்ட அறிக்கையில் சிரிய ராணுவத் தலைமைத்துவம் தெரிவித்தது. சிரியாவில் பயங்கரவாதத்தை ஒடுக்க சிரிய அரசாங்கப் படைகள் அதன் கூட்டணிப் படைகளால் மட்டுமே முடியும் என்றும் அது குறிப்பிட்டது. ஐஎஸ் அமைப்புக்கும் ஏனைய பயங்கரவாத அமைப்புகளுக்கும் எதிரான போர் தொடரும் என்றும் அது தெரிவித்தது.
கடந்த சில நாட்களாக ரஷ்ய வான்படைத் தாக்குதல்கள், ஷியா ஆயுப் படை உதவியுடன் சிரிய ராணுவம் அங்கு நிலப்பகுதிகளைச் சிறிது சிறிதாக கைப்பற்றி வந்தது. "சனிக்கிழமை இரவு இடம்பெற்ற கடுமையான தாக்குதலைத் தொடர்ந்து பால்மிராவின் புராதனப் பகுதியும் அக்கப்பக்கக் குடியிருப்புகளும் ராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது," என அத்தகவல் குறிப்பிட்டது. தாக்குதலைத் தொடர்ந்து ஐஎஸ் அமைப்பினர் கிழக்கு நகரங்களான நசுக்னா, ராக்கா, டெரிசார் நோக்கி பின்வாங்கினர்.