ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி இலங்கை தலைநகர் கொழும்பில் நடக்க இருக்கிறதாம். ஏப்ரல் 23ஆம் தேதியன்று அந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இலங்கையின் வரலாற்றில் இதுபோன்றதொரு இசைநிகழ்ச்சி நடந்ததில்லை, எனவே இந்நிகழ்ச்சியைத் தவறவிடாதீர்கள் என்று விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள். 'ரோஜா' படத்தில் இடம்பெற்ற 'சின்னச் சின்ன ஆசை' பாடல், அது உருவான விதம் ஆகியன பற்றியெல்லாம் அறிந்து கொள்ளத் தவறாமல் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுங்கள் என்றும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
அங்கு இப்படி விளம்பரங்கள் வந்துகொண்டிருக்கிற அதே நேரம் சென்னையில், கொழும்பில் நடக்கும் நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்கக்கூடாது என்கிற கோரிக்கையை முன்வைத்து முருக சேனை என்கிற அமைப்பின் சார்பில் ஏராளமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், "உலகத் தமிழினம் போற்றும் இசை மேதையே லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த ரத்தக் கறை படிந்த சிங்கள அரசோடு கைகோர்ப்பது நியாயமா?" என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.