பெண்கள் அணியும் வண்ண வளையல்களைக் கொண்டு ரங்கோலி கலைப் பொருட்களைச் செய்யும் 'ரங்கோலி பேங்கிள்= டேங்கிள் கலை வாரம் 2016' நிகழ்ச்சி இம்மாதம் 9ஆம் தேதி தொடங்கியது. 30 அமைப்புகளுடன் இணைந்து திருமதி விஜயா மோகன் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். வண்ணமயமான 'அக்ரிலிக்' அட்டைகள் மீது இரு பரிமாண ரங்கோலிகள் உருவாக்கப்பட்டன.
16, 20, 25, 30 செ.மீ. அளவிலான 'ஸ்டைரோ ஃபோம்' பந்துகளின் மீது முப்பரிமாண ரங்கோலிகள் செய்யப்பட்டன. காலை 9.30 மணியளவில் தொடங்கிய நிகழ்ச்சியில் பிரதமர் அலுவலக மூத்த துணை அமைச்சர் ஹெங் சீ ஹாவ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறிய ரங்கோலி ஒன்றை உருவாக்கினார். நிகழ்ச்சியில் உருவாக்கப்பட்ட ரங்கோலிகள் பல்வேறு நலவாழ்வு அமைப்புகள், மூத்தோருக்கான இல்லங்கள் ஆகியவற்றில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. இந்தப் புத்தாக்க முயற்சி சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.
வண்ண வளையல்கள், 'அக்ரிலிக்' அட்டைகள், 'ஸ்டைரோஃபோம்' பந்துகள் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட ரங்கோலிகளை திருமதி விஜயா மோகன் (வலது மேல்படம்) ஏற்பாட்டில் பல இனத்தவர் இணைந்து உருவாக்கினர். படங்கள்: விஜயா மோகன்