மரணதண்டனையை முழுமையாக சிங்கப்பூர் அகற்றுமா?
சட்ட அமைச்சருமான திரு சண்முகத்திடம் இந்தக் கேள்வியை முன்வைத்தார் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறை மாணவியான சேவாள் மீனாட்சி, 23. எழுந்து நின்று கேள்விகேட்கத் தயக்கமாக இருந்தாலும், உள்ளுக்குள் இருக்கும் கேள்வியை முன்வைக்க வேண்டும் என்ற உந்துதல் தனக்கு தைரியத்தைத் தந்ததாகக் கூறினார் சேவாள். மேலும், மரண தண்டனை தொடர்பாக சட்டம் சற்றுத் தளர்த்தப் பட்டிருப்பதால், எதிர்காலத்தில் மரண தண்டனை இல்லாத நிலை வருமா என அறிய நினைத்ததாக அவர் சொன்னார்.
இது மனித உரிமை சார்ந்த விஷயம். உயிரைப் பறிப்பதைவிட ஆயுள் தண்டனை தரலாமே என்பது அவரது கருத்து. இதற்கு பதில் அளித்த அமைச்சர், மெக்சிகோ போல் போதைப் புழங்கிகள் நிறைந்த, ஆபத்தான நாடாக சிங்கப்பூர் திகழ்வதை விரும்புகிறீர்களா என்று மாணவர்களிடம் கேட்டார். சிங்கப்பூர் பாதுகாப்பான நாடாக இருப்பதற்கு கடுமையான சட்டங்கள் உதவுகின்றன என்று சொன்னார்.
வலுவான தலைமைத்துவம், வெளிநாட்டு ஊழியர் உரிமைகள் குறித்தும் மாணவர்கள் கேள்விகள் எழுப்பினர். "பல தலைப்புகளைப் பற்றி அலசி ஆராய்ந்த இந்த கருத்தரங்கு விரிவானதாக இருந்தது. பயங்கரவாதத்தைப் பற்றி அமைச்சர் கூறியதை ஆமோதிக்கிறேன். நமது இஸ்லாமிய சகோதரர்களுடன் இணக்கமாகப் பழகுவதை நிறுத்தாமல் ஒரு சமூகமாக ஒற்றுமையாக வாழ்வதால் சமூகத்தைப் பிரிக்கப் பார்க்கும் பயங்கரவாதிகளின் திட்டங்கள் ஏதும் பலிக்காது," என்று கூறினார் நான்காம் ஆண்டு மாணவியான சேவாள் மீனாட்சி.
* அதிகரித்து வரும் சமூகச் செலவுகளில் நிதிநிலையை சமனாக வைத்திருக்க வேண்டிய திறன்;
* போதிய பிறப்பு விகிதம் இல்லாமல் மூப்படைந்து வரும் சமூகம்;
* வெளிநாடுகளிலிருந்து வரும் போட்டித்தன்மை;
* பயங்கரவாதம்.
இவை நான்கும் அடுத்த 50 ஆண்டுகளில் சிங்கப்பூர் எதிர்நோக்கும் சவால்கள் என்று கூறிய அமைச்சர் சண்முகம் அதுகுறித்து மேலும் விளக்கினார்:
அண்மைக்காலமாக அரசாங்கம் வரவுக்கு அதிகமாக செலவு செய்கிறது. மூத்த தலைமுறை சிங்கப்பூரர்கள் போதிய அளவு சேமித்து வைத்திருப்பதால் இது சாத்தியமாகிறது. அந்தச் சேமிப்பை முதலீடு செய்து அதில் இருந்து கிடைக்கும் வருமானத்தை அரசாங்கம் பயன் படுத்துகிறது.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர்களிடையே எதிர்காலச் சவால்களை முன்வைத்தார் உள்துறை அமைச்சர் கா. சண்முகம். படங்கள்: திமத்தி டேவிட், கூடுதல் செய்தி: சுதாஸகி ராமன்