கலகத்தில் ஈடுபட்டு ஒருவரின் மரணத்துக்கு காரணமானவர்களில் ஒருவராக இருந்து சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி ஓடி 14 ஆண்டுகள் கழித்து சரணடைந்த 71 வயது டான் கெங் ஹெங்குக்கு (படம்) 28 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கலகத்தில் ஈடுபட்ட குற்றத்தின் பேரில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார். இருவருடன் சேர்ந்து ஆடவர் ஒருவரைக் கொலை செய்ததாக டான் மீது முதலில் குற்றச்சாட்டு பதிவாகி இருந்தது. 2001ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதியன்று சூதாட்டம் தொடர்பில் எழுந்த பிரச்சினையால் திரு பெங் கத்தியால் குத்தப்பட்டார்.
இந்தச் சம்பவம் தோ பாயோ லோரோங் 1 புளோக் 128 அருகே நிகழ்ந்தது. சம்பவத்துக்குப் பிறகு சிங்கப்பூரர்களான மூவரும் மலேசியாவுக்குத் தப்பி ஓடினர். திரு பெங் டான் டோக் செங் மருத்துவமனையில் மரணம் அடைந்தார். டானுடன் இருந்த நியோவும் எங்கும் போலிசாரால் முறையே 2005ஆம் ஆண்டிலும் 2013ஆம் ஆண்டிலும் கைது செய்யப்பட்டனர். டானுக்கு ஐந்தாண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கலாம். 50 வயதுக்கு மேல் இருப்பதால் அவருக்குப் பிரம்படி விதிக்கப்பட வில்லை.