சென்னை: எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமாகா வெற்றிக் கூட்டணியை அமைக்கும் என அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற அக்கட்சிப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழக மீனவர் பிரச்சினை தொடர் கதையாக உள்ளது என்றார்.
"பல ஆண்டுகளாக நீடிக்கும் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கையிடம் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. இந்தப் பிரச்சினையில் மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். காணாமல் போகும் மீனவர்களைக் கண்டுபிடிக்க ஹெலிகாப்டரை தமிழக அரசு வழங்க வேண்டும்," என்றார் வாசன்.
இனி தமாகாவுக்கு வசந்த காலம்தான் என்று குறிப்பிட்ட அவர், கருத்துக்கணிப்புகளை தாம் நம்புவதில்லை என்றார். "மக்கள் கருத்தை மட்டுமே நம்புகிறோம். வரும் தேர்தலில் நமது பயணம் வெற்றிப் பயணமாக இருக்கும்," என்றார் வாசன்.