மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தைச் சீரமைப்பது குறித்து ஆய்வு செய்வதற்கான குழுவில் நடிகர் கமல் ஹாசன், இயக்குநர் கௌதம் கோஷ் உள்ளிட்டோர் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். தணிக்கை வாரிய செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இயக்குநர் ஷியாம் பெனகல் தலைமையிலான சீரமைப்புக் குழு கடந்த 1ஆம் தேதி அமைக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லி கடந்த வாரம் மும்பையில் வெளியிட்டார்.
அந்தக் குழுவில் தயாரிப்பாளர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா, திரைப்படத் துறை பத்திரிகையாளர் பாவனா சோமையா உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர்கள் ஷாஜி கருன், கௌதம் கோஷ் ஆகியோர் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். சீரமைப்புக் குழுவில் நாட்டின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.