சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம், அதன் தலைவர் திரு. நா. ஆண்டியப்பனின் 'முள்ளும் மலரும்' எனும் நூலின் வெளியீட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இது அவரது ஐந்தாவது நூல்; எனினும் முதல் சிறுகதைத் தொகுப்பு. அந்த நூலின் வெளியீட்டு விழா அடுத்த மாதம் 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை மணி 6.00க்கு உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெறும். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் மதியுரைஞரும் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்புநிலைப் பேராசிரியருமான முனைவர் சுப.திண்ணப்பன் தலைமையில் நடைபெறும் வெளியீட்டு விழாவில் தமிழ்த் திரைப்பட, ஆவணப்பட இயக்குநரும் எழுத்தாளருமான திரு பாரதி கிருஷ்ணகுமார் சிறப்புரை ஆற்றுவார்.
இந்து அறக்கட்டளை வாரியத்தின் துணைத் தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினருமான திரு இரா. தினகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நூலை வெளியிடுவார். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் புரவலரும் ஜோஸ்கோ பயண ஏற்பாட்டு நிறுவனத்தின் உரிமையாளருமான நாகை திரு தங்கராசு முதல் நூலைப் பெற்றுக் கொள்வதுடன் வாழ்த்துரையும் ஆற்றுவார். முனைவர் இளவழகன் முருகன் நூல் அறிமுகம் செய்ய, எழுத்தாளர் கழகச் செயலாளர் திரு சுப.அருணாசலம் வாழ்த்துரை ஆற்றுவதுடன் நிகழ்ச்சி நெறியாளராகவும் பணியாற்றுவார். இறுதியில் நூலாசிரியர் திரு நா.ஆண்டியப்பன் ஏற்புரையும் நன்றியுரையும் ஆற்றுவார்.. இந்த நிகழ்ச்சிக்கு அனைவரும் வரவேற்கப் படுகின்றனர்.