தஞ்சாவூர்: திருவள்ளுவர் நாளை முன்னிட்டு பெரியவர் ஒருவர் தனது கடையில் ஒரு ரூபாய்க்கு தேநீர் விற்பனை செய்தார். அவர் கடந்த பல ஆண்டுகளாக இவ்வாறு செய்து வருவது தெரியவந்துள்ளது. பேராவூரணியை சேர்ந்தவர் தங்கவேலனார் என்ற அம்முதியவர் அதே பகுதியில் தேநீர் கடை நடத்தி வருகிறார். தமிழ்ப் பற்றாளரான இவர் திருக்குறள் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர்.
இதனால் தன்னுடைய பெயருக்கு முன்பு திருக்குறள் தங்கவேலனார் என்று சேர்த்துக் கொண்டதாகத் தெரிவிக்கிறார். தனது தேநீர்க் கடையின் முன்பு பலகையில் தினமும் ஒரு திருக்குறளை எழுதி அதற்கான விளக்கத்தையும் எழுதி வைக்கிறார்.
இந்நிலையில் திருவள்ளுவர் நாளை முன்னிட்டு நேற்று தனது கடையில் ஒரு ரூபாய்க்கு தேநீர் விற்பனை செய்தார். அவரது இந்நடவடிக்கையைப் பலரும் பாராட்டினர். மேலும் நேற்றைய தினம் ஏராளமானோர் தங்கவேலனார் கடைக்கு வந்து, ஒரு ரூபாய் தேநீரை ருசித்துச் சென்றனர். இதன் காரணமாக தனக்கு நஷ்டம் ஏற்பட்டாலும், கடைக்கு வருபவர்களுக்கு திறக்குறள் குறித்த சில விளக்கங்களை அளிப்பது தமக்குத் திருப்தி அளிப்பதாக அவர் தெரிவித்தார். தனது இச்சேவை தொடரும் என்றும் அவர் கூறினார்.