காரைக்குடி: காரைக்குடியில் கடந்த சில நாட்களாக வாகனச் சோதனையில் லட்சக்கணக்கில் ஹவாலா பணம் சிக்கி வருவது காவல்துறையினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. வெளிநாடுகளில் வசிப்பவர்கள் வங்கி மூலம் பணம் அனுப்பும்போது 25 முதல் 30 விழுக்காடு வரை வரி கட்ட வேண்டும். இதனால் சட்டவிரோதமாக ஹவாலா என்று அழைக்கப்படும் முறையில் பண பரிவர்த்தனையை மேற்கொள்கின்றனர். காரைக்குடியில் ஜூன் மாதம் 2.70 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த 25 நாட்களுக்கு முன்பு செட்டிநாடு காவல்துறையினர் நேமத்தான்பட்டி சோதனைச் சாவடியில் ரூ.5.25 லட்சத்தை பறிமுதல் செய்தனர். அண்மையில் காரைக்குடி வடக்கு துணை ஆய்வாளர் அரவிந்தராஜ் மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.