லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் வாட்ஃபர்ட் குழுவிடம் ஸ்பர்ஸ் எதிர்பாராத் தோல்வி அடைந்துள்ளது. ஸ்பர்ஸ் ஒரு கோல் போட்டு முன்னிலை வகித்தும் தோல்வியின் பிடியிலிருந்து அக்குழுவால் தப்பிக்க முடியவில்லை. ஆட்டம் முடிவதற்குள் இரண்டு கோல்களைப் போட்டு வாட்ஃபர்ட் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் இப்பருவத்தில் இதுவரை களமிறங்கிய அனைத்து ஆட்டங்களிலும் வாட்ஃபர்ட் வெற்றி பெற்றுள்ளது. மாறாக, ஸ்பர்ஸ் இப்பருவத்தில் அதன் முதல் தோல்வியைச் சந்தித் துள்ளது.
முற்பாதி ஆட்டத்தில் இருகுழுக் களும் கோல் ஏதும் போடவில்லை. இடைவேளையின்போது ஆட்டம் சம நிலையில் இருந்தது. ஆட்டத்தின் 53வது நிமிடத்தில் ஸ்பர்சுக்கு அதிர்ஷ்டம் கைகொடுத்தது. வாஃட்பர்ட்டின் அப்தோலாயே டோகோரே சொந்த கோல் போட்டதை அடுத்து ஸ்பர்ஸ் முன்னிலை வகித்தது. இனி வெற்றி நிச்சயம் என்று நம்பிக்கையுடன் இருந்த ஸ்பர்சுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஸ்பர்ஸ் முன்னிலை பெற்றதும் வாட்ஃபர்ட்டின் அவதாரம் மாறியது. திடீர் உத்வேகம் பிறந்தது போல வாட்ஃபர்ட் தாக்குதலில் தீவிரம் காட்டியது. அதற்கான பலனையும் அது பெற்றது. ஆட்டத்தின் 69வது நிமிடத்தில் வாட்ஃபர்ட்டுக்கு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. அதிலிருந்து அனுப்பப்பட்ட பந்தைத் தலையால் முட்டி வலைக்குள் அனுப்பி ஆட்டத்தைச் சமன் செய்தார் டிரோய் டீனி. ஆட்டம் முடிய 14 நிமிடங்கள் இருந்தபோது வாட்ஃபர்ட்டின் இரண் டாவது கோலை கிரேக் கேத்கார்ட் போட்டார். ஆட்டத்தைச் சமன் செய்ய ஸ்பர்ஸ் குழுவுக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை நழுவவிட்டார் ஹேரி கேன்.
ஸ்பர்ஸை வீழ்த்திய மகிழ்ச்சியில் வாட்ஃபர்ட்டின் அப்தோலாயே டோகோரேவும் (இடது) இட்டியேன் கப்புயிவும் இணைந்து கொண்டாடுகின்றனர். படம்: இபிஏ-இஎஃப்இ