கோலாலம்பூர்: மலேசியாவில் நிதி அமைச்சர் லிம் குவான் எங் மீதான ஊழல் வழக்கு கைவிடப்பட்டதற்கான காரணத்தை அரசாங்கத் தரப்பு துணை வழக்கறிஞர் முகமட் ஹனாபியா ஸக்ரியா விளக்கியுள்ளார். அந்த வழக்கு விசாரணையின்போது சாட்சியம் அளித்தவர்கள் கூறிய உண்மைகள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையிலேயே அந்த வழக்கு கைவிடப்பட்டதாக அவர் கூறினார். லிம் மீதான குற்றச்சாட்டை கைவிட எடுக்கப்பட்ட முடிவு அரசியல் நோக்கம் கொண்டது அல்ல என்று அவர் கூறினார். அத்துடன் அந்த வழக்கை கைவிட எடுக்கப்பட்ட முடிவில் அரசாங்க தலைமைச் சட்ட அதிகாரி டோமி தோமஸ் சம்பந்தப்பட்டுள்ளார் என்று கூறப்படுவதை அவரது அலு வலகம் நிராகரித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட லிம் மற்றும் வணிகர் பாங் கி கூன் முன்வைத்த உண்மைகள் மற்றும் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்தபோது கிடைத்த புதிய ஆதாரங்கள் அடிப்படையில் அவர் களுக்கு எதிரான வழக்கைக் கைவிடும் முடிவைத் தான் மட்டுமே எடுத்ததாக முகமட் ஹனாபியா ஸக்ரியா கூறினார். நடுநிலை தவறாமல் சட்டத்தை தான் பின்பற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.