ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஏழு பேரை விடுவிப்பது குறித்து தமிழக அரசே முடிவுசெய்யலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இது குறித்து முடிவெடுப்பதற்கான அதிகாரம் தமிழக ஆளுநருக்கு உள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டு உள்ளது. பேரறிவாளன், சாந்தன் உட்பட ஏழு பேரையும் விடுவிப் பது தொடர்பான வழக்கு உச்ச நீதி மன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. இந்நிலையில் ஏழு பேரையும் விடுவிப்பது தொடர்பாக அன்றைய முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார்.
ஆனால், ராஜீவ் கொலை வழக்கை சிபிஐ விசாரித்ததால் அதில் தமிழக அரசு தலையிட எந்தவித அதிகாரமும் இல்லை என மத்திய அரசு உச்ச நீதி மன்றத்தில் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது. தண்டனை பெற்ற ஏழு பேரை விடுதலை செய்யக் கோரி தமிழக அரசு நிறைவேற்றிய தீர் மானம் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தமிழக ஆளுநருக்கு இருப்பதாக உச்ச நீதிமன்றம் கருதுகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர். எனவே, ஏழு பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு ஆளு நருக்குப் பரிந்துரை செய்யலாம் என்றும், கடந்த 2016ஆம் ஆண்டு இது தொடர்பாக தமிழக அரசு கொடுத்துள்ள மனு மீதும் ஆளுநரே முடிவெடுக் கலாம் என்றும் நீதிபதிகள் தீர்ப் பளித்துள்ளனர்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசார கூட்டத்தில் படுகொலை செய்யப் பட்டார். இந்த வழக்கில் ஏழு பேர் தண்டனை பெற்றனர்.