புதுக்கோட்டை: விமானப் பயணத்தின்போது தமிழக பாஜக தலைவி தமிழிசையை நோக்கி பாஜகவுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பிய ஆராய்ச்சி மாணவி லூயிஸ் சோபியா தனது புதிய கடப்பிதழை ஒப்படைக்க வேண்டும் என போலிசார் அழைப்பாணை அனுப்பியுள்ளனர். தமிழிசை அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட அவர், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். கைது செய்யப்படும்போது சோபியாவிடமிருந்து அவரது பழைய கடப்பிதழை மட்டும் போலிசாரால் பறிமுதல் செய்ய முடிந்தது.
புதிய கடப்பிதழை ஒப்படைக்குமாறு அனுப்பப்பட்ட அழைப்பாணையை சோபியாவின் தந்தை வாங்க மறுத்துவிட்டார். இந்நிலையில் 7ஆம் தேதிக்குள் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் நேரில் முன்னிலையாகி கடப்பிதழை ஒப்படைக்க வேண்டும் என்று குறிப்பிட்டு அனுப்பப்பட்ட இரண்டாவது அழைப்பாணையை சோபியாவின் குடும்பத்தார் பெற்றுக் கொண்டதாகத் தெரிகிறது.